இந்தப் பொதுத் தேர்தல் முன்னைய தேர்தல்களைப் போல் இல்லை. மாறாக, இது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் தேர்தல். இது தற்போதைய பிரச்சினைகளை மையமாகக் கொண்டது அல்ல. அது வருங்காலத் தீர்வுகள் பற்றியது என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கட்சி அரசியல் ஒளிபரப்பில் டாக்டர் டான் பேசினார்.
இந்த கொவிட்-19 நெருக்கடியைச் சமாளிக்க வேண்டுமானால், தங்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 93 இடங்களும் வேண்டும் என்று மக்கள் செயல் கட்சி கூறுகிறது. ‘ஒன்றிணைந்த சிங்கப்பூர்’ என்பது அவர்களைப் பொறுத்த வரையில் நாடாளுமன்றத்தில் எந்தவொரு எதிர்க்கட்சி உறுப்பினரும் இல்லாத முழுமையாக ஆதிக்கம் செலுத்துவது என்றும் டாக்டர் டான் கூறினார்.
“நாடாளுமன்றத்தில் அனைத்து வகையான கருத்துகளையும் பிரதி பலிப்பதுதான் ஓர் உண்மையான ஒன்றிணைந்த சிங்கப்பூர். வெவ்வேறு வகையான சிந்தனைகள், அனுபவங்கள், யோசனைகள் ஆகியவைதான் கூட்டு அறிவாற்றல் எனப்படுகிறது. இதனை மையமாக வைத்து முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். அதற்கு வகை செய்ய சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைத் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி ஆக்குங்கள்,” என்று டாக்டர் டான் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
“நாட்டின் நிதி இருப்பில் உள்ள உங்களது பணத்திலிருந்து பில்லியன் கணக்கான தொகையை அரசாங்கம் கொவிட்-19 தொடர்பான மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தியுள்ளன. இது சிங்கப்பூர் வரலாற்றில் அரசாங்கத்தின் மிகப் பெரிய வரவு செலவுத் திட்டம்.
“நமது இந்தப் பணம் சரியான முறையில் செலவழிக்கப்படுவதைச் சரிபார்க்க நடுநிலையான குரல்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இந்த மீட்பு நடவடிக்கை வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. மாறாக, கொள்ளைநோய் நம்மைத் தொடர்ந்து பாதித்து வரும் வேளையில் அந்த மீட்பு நடவடிக்கைகள் நமது வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும்,” என்றும் டாக்டர் டான் தெரிவித்தார்.
“தேசிய கொள்கைகளை சமூக சுகாதாரப் பராமரிப்பு அணுகுமுறையில் மறுவடிவமைத்தால் அது வாழ்வைப் பாதுகாக்கும். கிருமித்தொற்று விகிதத்தைக் கட்டுப் படுத்த வில்லை என்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் சுற்றுப்பயணிகளும் சிங்கப்பூருக்கு வர மாட்டார்கள்.
“ஆக, தற்போதைக்கு கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தல் பிரசாரத்தில் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் பற்றி மசெக குறைவாகவே பேசியுள்ளது. அவர்கள் அதிலிருந்து தங்கள் கவனத்தை திசை திருப்பி விட்டார்கள்.
“வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் எங்கள் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கையைப் படித்திருப்பீர்கள். அதில் மத்திய சேமநிதி, பொது வீடமைப்பு, உள்நாட்டுத் தொழில்கள், தொழிலாளர்கள் பற்றியும் இடம்பெறுகின்றன.
“நாட்டின் எல்லைகளைத் திறக்க நாளாகும் என்பதால், நமது நிதி இருப்பைக் கொண்டு வலுவான உள்ளூர் வர்த்தகங்களுக்கு உதவுவதை நாங்கள் உறுதி செய்வோம். உள்ளூர் விநியோகச் சங்கிலித் தொடர்களை வளர்க்க, புத்தாக்கத்தை ஊக்கப்படுத்த நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
“இந்தத் தருணத்தில் வாக்காளர்களின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாம் ஒற்றுமையாக இருந்தால், உலகில் எந்த சக்தியாலும் நம்மைப் பிரிக்க முடியாது. இது என் மனப்பூர்வமான நம்பிக்கை,” என்றார் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் டான் செங் போக்.
டாக்டர் டானின் உரையைத் தமிழில் வாசித்தார் அக்கட்சியின் உறுப்பினர் திரு குமரன் பிள்ளை (படம்). அவரது உரை மீடியாகார்ப் வசந்தம் ஒளிவழியில் நேற்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.