தற்போதுள்ள சிங்கப்பூரைவிட சிறந்ததொரு சிங்கப்பூரைக் கற்பனை செய்து பார்க்குமாறு தம் உரையைத் தொடங்கினார் பாட்டாளிக் கட்சியின் தலைவர் சில்வியா லிம்.
நாட்டின் உள்கட்டமைப்புக்கும் பயனுள்ள அமைப்பு முறைகளுக்கும் மசெகவின் தொடக்க காலத் தலைவர்களுக்கு நன்றி கூறியாக வேண்டும் என்று தெரிவித்த அவர், இங்கு கண்ணுக்குப் புலனாகாத அம்சங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார்.
மற்றவர்களது கருத்துகள், கலாசாரம், புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை, பரிவு, நியாயம், மகிழ்ச்சி போன்றவற்றில் நாம் வெளிப்படையாக இருக்கும் போக்கால் சிங்கப்பூரில் நேர்மறையான மாற்றங்கள் வருமா என அவர் வினவினார்.
தற்போது அரசாங்கம் மக்களைக் கட்டுப்படுத்தி ஆளும் முறை மாறி மீண்டும் ஆட்சி, மக்களுக்கே சென்று சேர்வது குறித்தும் அவர் பேசினார். மக்களிடமிருந்து பல தரப்பட்ட கருத்துகள் திரட்டப்படுவதுடன் அரசாங்கக் கொள்கைகள் முன்னரே முடிவுசெய்யப்பட்டு திணிக்கப்படாது என்றார் அவர்.
நாட்டு விவகாரங்களில் கருத்துகள் கூறுவதுடன் ஆலோசனைகள் சொல்வதிலும் மக்கள் பங்காற்றலாம்.
நாட்டை நேசிக்கும் சிங்கப்பூரர்கள், எனக் குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகளையும் மற்றவர்களையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சரிசெய்ய வேண்டிய தொல்லைகளாக பார்க்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ளது போல் இங்கும் ஓவியர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் மற்றும் வேறு புத்தாக்கக் கலைஞர்களுக்கு மதிப்பும் பாதுகாப்பும் கிடைப்பது குறித்துப் பேசினார்.
ஊடகச் சுதந்திரம் என வரும்போது தற்போது உலகநாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் 159வது இடத்தில் உள்ளது. அது மாற வேண்டும் என்றும் அவர் சுட்டினார்.
வரி செலுத்தி வரும் மக்களின் பணத்தை நிர்வகிக்கும் மக்கள் கழகம் போன்ற அமைப்புகள், மசெகவின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்றும் பள்ளிகளில் இடம் ஒதுக்கப்படுவது நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மத்திய சேமநிதி பணத்திலும் நாட்டின் இருப்புகளிலும் வெளிப் படைத்தன்மை வேண்டும் என்றும் முதலீடு செய்வோரின் சம்பளங்களில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.
வேலை-வாழ்க்கை சமநிலை, முதியோருக்கு வேலை செய்வது தொடர்பான சுதந்திரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை விட மக்களிடையே நியாய உணர்வையும் மகிழ்ச்சியையும் வளர்ப்பதில் கவனம் போன்ற சூழல்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சிறந்த பொருளியலும் போட்டித்தன்மைமிக்க அரசாங்கமும் கொண்ட நியூசிலாந்து, தைவான், டென்மார்க், ஆஸ்திரேலியா, பின்லாந்து, தென்கொரியா போன்ற நாடுகள், தேர்தலில் ஆளும் கட்சி மாறினாலும் பாதிப்புறாமல் தொடர்ந்து வலுவாக உள்ளதை அவர் உதாரணம் காட்டினார்.
அனைவரும் பாடுபட்டால் சிங்கப்பூரில் ஆக்கபூர்வமான மாற்றம் நிலவும் என்பதே பாட்டாளிக் கட்சியின் நம்பிக்கை என அவர் தெரிவித்தார். மேம்பட்ட ஒரு சிங்கப்பூரைக் கற்பனை செய்ய முடிகிறது என்ற எண்ணத்துடன் இளைய வேட்பாளர்களும் தம் கட்சியில் இணைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
சிறந்ததொரு சிங்கப்பூரைக் கற்பனை செய்து அங்கு வெளிப் படைத்தன்மை, பரிவு, நியாயம் இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பாட்டாளிக் கட்சித் தலைவரான திருவாட்டி சில்வியா லிம்.