சுதந்திரம் பெற்றது முதல் சிங்கப்பூர் சந்திக்கும் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்றும் அதனுடன் கொவிட்-19 கிருமித்தொற்று சூழலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் நேற்று சீர்திருத்தக் கட்சியின் தலைவர் கென்னத் ஜெயரத்னம் (படம்) கூறினார்.
இவ்விரு நெருக்கடிகளையும் மக்கள் செயல் கட்சி கையாண்ட விதத்தால் ஏற்பட்ட விளைவுகள் நம்மைத் தவிக்கவிடக்கூடாது என்றார் அவர்.
‘மேம்பட்ட, நியாயமான வளர்ச்சி காண்போம்’ என்ற முழக்க வரியைக் கொண்டுள்ளது சீர்திருத்தக் கட்சி. கொவிட்-19 நெருக்கடிக்குப் பிறகு அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஏதுவான, நியாயமான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்ற அதன் இலக்கை திரு கென்னத் பகிர்ந்து கொண்டார். இதன்படி குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் முனைவர்கள், சிறு வர்த்தக உரிமையாளர்கள், நடுத்தர குடும்பங்கள் ஆகியோர் கருத்தில் கொள்ளப்படுவர் என்றார்.
தற்போதைய வரவுசெலவுத் திட்டங்களுக்கு ஆங்காங்கே செய்யப்பட்ட சிறு மாற்றங்கள்வழி மசெகவின் செயல்பாடு உள்ளது என்றும் சிரமங்களை அது சற்று தாமதிக்கவே உதவும். சீர்திருத்தக் கட்சியின் உறுப்பினர்கள் நாட்டை நேசிப்பதாகவும் வாக்காளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவேதான், நெருக்கடியிலிருந்து மீண்டு வர, விளக்கமாக அமைந்த தன் திட்டங்களைக் கட்சி முன்வைத்துள்ளதாக அவர் சொன்னார். முதிர்ச்சி அடைந்த அங் மோ கியோ, ராடின் மாஸ் வட்டாரங்களில் உள்ளதால், குடியிருப்பாளர்களின் வீவக வீடுகளின் மதிப்பு சொன்னபடி உயரவில்லை என்றும் அது இறங்குமுகமாகவே உள்ளது என்றும் அவர் சுட்டினார்.
‘உங்களின் கோபத்தில் நியாயம் உண்டு’ என்று மீண்டும் மீண்டும் கூறியவாறு, வேலைகள், மத்திய சேமநிதி, எளிதில் பயன் படுத்த முடியாத திட்டங்கள் போன்றவற்றின் தொடர்பில் திரு கென்னத் மக்களது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அதிகாரத்தில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங்களின் பணியைச் சரியாக செய்தார்களா என்பதை மதிப்பிட்டு வாக்களிக்கு மாறு அவர் கோரினார். மக்கள் தங்களின் ஆதங்கத்தை வாக்குகள் மூலம் பதிவுசெய்யும்போது, எதிர்காலத்தில் மசெக மேலும் சிறப்பாகச் செய்ய அது ஒரு மதிப்பீடு அட்டையாகத் திகழும் என்றார் திரு கென்னத்.