சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். களத்தில் இருந்து பணியாற்றக்கூடிய ஊழியர்கள் அதிகமானோர் தேவைப்படுகின்றனர் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் தெரி வித்தார்.
கிருமித்தொற்றுச் சூழலைச் சமாளிப்பதற்கு சிங்கப்பூரர்களுக்கு நூறாயிரம் வேலைகளையும் பயிற்சி இடங்களையும் உருவாக்கும் அரசாங்கத்தின் இலக்கு குறித்து அவர் கோடிட்டுக் காட்டினார்.
இவ்வேலைகளில் கிருமித்தொற்று சூழலைச் சமாளிக்கும் சேவைத்துறை, கிருமித் தொற்றுச்சோதனையை ஒருங்கிணைக்கும் பணிகளும் உள்ளடங்கும் என்றார் அவர்.
மசெக ஃபேஸ்புக் தளத்தில் ஒரு மணி நேரம் நடந்த உரைநிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங்குடன், தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், ஜனில் புதுச்சேரி, லோ யென் லிங், நடியா சம்டின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திரு லாரன்ஸ் வோங் கூறுகையில், “நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கையைக் கையாள மாபெரும் இயக்கம் தேவை.
இப்போது மக்கள் பார்வைக்கு சோதனை, தடமறிதல் போன்ற சேவைகள் மட்டுமே வெளிப்படும். ஆனால் இந்தப் பணியை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், சளி மாதிரிகளைக் எடுக்கும் குழுக்கள், அவற்றைப் பரிசோதிக்க சோதனைக்கூடம், அந்தச் சோதனைக்கூடத்தில் அதுசார்ந்த தொழில்நுட்பர்கள், ஏராளமான நோயாளிகளைக் கவனித்துக்கொள்வதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் என அதிகமானோர் தேவைப்படுகின்றனர்,” என்றார்.
கிருமித்தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள் பாதுகாப்பான முறையில் மீண்டும் செயல்படுவதை உறுதிசெய்து கிருமித்தொற்று விகிதத்தைக் கட்டுப்படுத்துவதே அதிகாரிகளின் முக்கிய குறிக்கோளாக உள்ளது என்றார் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட அமைச்சுகள் நிலை பணிக்குழுவிற்கு இணைத் தலைவரான திரு லாரன்ஸ் வோங்.
“கொண்டாட்டம், கேளிக்கை என நாம் இருந்தால் சோதனைகளையும் தடமறிதல்களையும் கூட்டுவதன் மூலம் கிருமித்தொற்றிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியாது. எனவே தொடர்ந்து கட்டுப்பாட்டுடனும் விழிப்புடனும் இருந்து கிருமித் தொற்றைத் துடைத்தொழிப்போம்,” என்று திரு வோங் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.