வாக்களிப்புக்கான நேரத்தை தேர்தல் துறை இரவு 10 மணி நேரம் வரை நீட்டித்தது வழக்கத்திற்கு மிகவும் மாறுபட்டது என்றும் இதனால் இம்முறையின் நேர்மை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் டான் செங் போக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"சிங்கப்பூரில் நிறுவப்பட்ட ஜனநாயக அமைப்புகளின் மீது சிங்கப்பூர் மக்கள் கட்சி ஆழ்ந்த கடப்பாட்டைக் கொண்டுள்ளது," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வாக்களிப்பு முடிவதற்கு 90 நிமிடங்கள் மட்டுமே எஞ்சிய நிலையில் நீட்டிப்பை அறிவித்த தேர்தல் துறை பின்விளைவுகளையும் உட்கருத்துகளையும் கருத்தில் கொள்ளவில்லை என திரு டான் கூறினார்.
இந்நிலையில் ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியின் தலைவர் மிஷெல் லீ, தேர்தலில் வாக்களிக்கவேண்டும் என்று சிங்கப்பூரர்கள் மன உறுதியை வாக்களிப்பு நிலையங்களில் காத்திருக்கும் நீண்ட வாக்காளர் வரிசைகள் காட்டுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
"எதிர்பாராத சூழல்கள் ஏற்படத்தான் செய்யும் என்பது எங்களுக்குப் புரியும். இன்று (வாக்கெடுப்புக்காக) பணிபுரியும் அனைவருக்கும் கடினமாக இருக்கும்," என்று ஜூரோங் குழுத்தொகுதியைச் சேர்ந்த திருவாட்டி லீ தெரிவித்தார்.
வாக்காளர்களின் மன உறுதி இதன்மூலம் தெரிவதாகக் கூறிய திருவாட்டி லீ, அனைவரும் பாதுகாப்புடனும் சுகாதாரத்துடனும் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
திரு டான் செங் போக்கைப் போல மக்கள் சக்தி கட்சிகளின் தலைவர் கோ மேங் கான், தேர்தல் துறையின் முடிவு குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். வாக்களிப்பு முடியும்வரை வாக்களிப்பு நிலையங்களில் தங்கியிருக்க தமது கட்சியினருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அங்கிகள் அணிந்திருக்கவேண்டும் என்று தேர்தல் துறை முன்னதாகத் தெரிவிக்கவில்லை எனச் சாடியுள்ளார். "இது குறித்து தேர்தல் துறையிலிருந்து மிகத் தெளிவான விளக்கம் வேண்டும்," என்று அவர் கூறினார்.