வாக்களிப்புக்கான நேரம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும் வாக்கெடுப்பிலும் வாக்குகளை எண்ணும் முறையிலும் எந்த மாற்றமும் இல்லை என்று தேர்தல் துறை வெள்ளிக்கிழமை ( ஜூலை 10 ) தெரிவித்தது.
வாக்களிப்புக்கான நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படும் என்று தேர்தல் துறை முன்னதாக அறிவித்தது. குறைந்த எண்ணிக்கையிலான வாக்களிப்பு நிலையங்களில் உருவான நீளமான மக்கள் வரிசைகளைச் சமாளிப்பதற்காகவும் வாக்களிப்பதற்கு அவர்கள் அனைவருக்கும் போதிய நேரம் அளிப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்தல் துறை தெரிவித்தது.
வாக்களிப்பு நிலையங்களில் வேட்பாளர்களும் வாக்கெடுப்பு முகவர்களும் வாக்குகள் எண்ணப்படுவதை நேரில் கவனிக்கலாம் என்று தேர்தல் துறை தெரிவித்தது. நிராகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளைப் பற்றி தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும் மூடப்பட்ட வாக்குப் பெட்டிகளில் முத்திரை இட அல்லது கையெழுத்திட அங்கு அவர்களால் முடியும்.
தேர்தல் நேரத்தின் நீட்டிப்பு குறித்து பல்வேறு கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.