புதிய குழுத் தொகுதியான செங்காங்கையும் பாட்டாளிக் கட்சி பிடித்து வரலாறு படைத்திருக்கிறது. 60,136 (52.13%) வாக்குகளுடன் செங்காங்கில் வெற்றி பெற்று இரண்டாவது குழுத் தொகுதியை பாட்டாளிக் கட்சி கைப்பற்றியது.
இதன்மூலம் இரு குழுத்தொகுதிகள், ஒரு தனித் தொகுதியுடன் தன் பலத்தை பாட்டாளிக் கட்சி மேலும் வலுப்படுத்திக்கொண்டுள்ளது.
செங்காங் குழுத் தொகுதியில் திரு ஜேமஸ் லிம், திரு லுயிஸ் சுவா, திருவாட்டி ரயீசா கான், திரு ஹி டிங்ரு ஆகியோர் அடங்கிய குழுவை பாட்டாளிக் கட்சி நிறுத்தியது.
பாட்டாளிக் கட்சியின் வெற்றிக்கு ஜேமஸ் லிம் ஒரு முக்கிய காரணம். இந்தத் தேர்தலில் அதிகம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது ஜேமசின் பேச்சுக்களாகத்தான் இருக்கும். அவரது பேச்சாற்றலும் பாங்கும் அறிவாற்றலும் பலராலும் புகழப்பட்டு வருகின்றன.
என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தலைமையில், திரு லாம் பின் மின், திரு அம்ரின் அமின், திரு ரேமண்ட் லாய் ஆகியோர் அடங்கிய மக்கள் செயல் கட்சிக் (மசெக) குழு பெற்ற வாக்குகள் 55,214 (47.87%). 4.27% வாக்கு வித்தியாசத்தில் மசெக இந்த குழுத் தொகுதியை இழந்தது.
புதிதாக உருவாக்கப்பட்ட, நான்கு உறுப்பினர் குழுத்தொகுதியான செங்காங்கில் மொத்தம் 120,166 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்று இருந்தனர்.
பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியுடன், பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதி மற்றும் செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியின் சில பகுதிகளையும் இணைத்து செங்காங் குழுத்தொகுதி உருவாக்கப்பட்டது.
2015 பொதுத் தேர்தலில் பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் மசெக 72.9% வாக்குகளைப் பெற்று, வாகை சூடியது. அதேபோல, செங்காங் வெஸ்ட் தனித்தொகுதியிலும் மசெகவின் லாம் பின் மின் 62.1% வாக்குகளைப் பெற்று, எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளிக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து இருந்தார்.
அந்தத் தேர்தலில், பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதியில் மசெக சார்பில் களமிறக்கப்பட்ட சார்ல்ஸ் சோங் 51.8% வாக்குகளைப் பெற்று, பாட்டாளிக் கட்சியின் லீ லி லியனை வென்றார்.