புதிதாக அமைக்கப்பட்ட மார்சிலிங் - இயூ டீ தொகுதியில் கடந்த 2015ஆம் ஆண்டு பொது தேர்தலில் வாக்களித்தபோது தேர்தல் பரபரப்பும் உற்சாகமும் எங்கும் நிறைந்திருந்தன.
வீட்டின் அருகிலிருந்த ஃபூச்சுன் சமூக நிலையத்திற்கு மதிய வேளையில் வாக்களிக்கச் சென்ற போது, வரிசையில் காத்திருக்க வேண்டியதாயிற்று. உடன் வந்திருந்த நண்பருடன் பேசிக்கொண்டே காத்திருந்தேன்.
சுற்று வட்டாரத்தில் தேர்தல் களைகட்டியிருந்தது. வாக்களித்தவர்கள் நிலையத்தின் வெளியே ஒன்றுகூடிப் பேசுவதும் இரவு நேரத்தில் காப்பிக் கடைகளில் தேர்வு முடிவுகளை தொலைக்காட்சி வழி பொதுமக்கள் பார்வையிடுவதும் மறக்க முடியாதவை.
இப்போது திருமணமாகி மார்சிலிங் - இயூ டீ குழுத்தொகுதியிலிருந்து ஹாலந்து-புக்கிட் தீமா தொகுதிக்கு குடியேறிவிட்டேன்.
சூழல் மட்டும் புதியதல்ல, கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு நடுவே நடக்கும் இத்தேர்தலில் பிரசாரம், செய்தி சேகரிப்பது, வாக்களிப்பது என்று எல்லாமே புதிதாக இருந்தன.
திறந்த வெளியில் அனைவரை யும் ஈர்க்கும் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரம் இணையத்திற்கு சென்றுவிட்டது.
வாக்களிப்பு நாளன்று கட்சி ஆதரவாளர்கள் பொது இடங்களில் கூடவில்லை.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தால் முகக்கவசம் அணிந்தவாறு வெளியே செல்லும் சூழ்நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட, தேர்தல் களையிழந்து விட்டது. தேர்தல் களம் சமூக ஊடகத்திற்கு இடம் மாறிவிட்டது.
இம்முறை வாக்களிப்பதற்கு முன்னர் வாக்களிப்பு நிலையத்தில் வரிசை நிலவரத்தைப் பற்றி இணையத்தளம் வழி தெரிந்துகொள்ளும் வசதி வரவேற்கத்தக்க முயற்சி.
உடல் வெப்பநிலையை சோதித்தல், முகக்கவசம் அணிதல், கை சுத்திகரிப்பானை பயன்படுத்துதல் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெற்ற வாக்களிப்புச் சூழலை எவருமே கற்பனைகூட செய்திருக்க மாட்டோம்.
வாக்குச் சாவடியில் இருந்த X-முத்திரையிடும் சிவப்பு பேனா, வாக்குச் சீட்டின் கட்டத்தில் பேனாவால் குறியிட வேண்டிய பதற்றத்தைத் தணித்துவிட்டது. எப்போதும் கட்டத்தின் நான்கு முனைகளையும் இணைத்து சரியாகக் குறியிட வேண்டுமென முயற்சி எடுப்பேன்.
அடுத்த தேர்தல் பழையபடி பரபரப்பாகவும் உற்சாகமாகவும் கூட்டத்துடனும் கொண்டாடலாம் என்று நம்புகிறேன்.
அதேபோல், தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணி நாடாக இருக்கும் சிங்கப்பூரில் எதிர்காலத்தில் வாக்களிப்பு மின்னிலக்க முறைக்கு மாறும் என எதிர்பார்க்கிறேன்.