நடந்து முடிந்த பொதுத் தேர்தலை அடுத்து அமையவிருக்கும் புதிய நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்கள்தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
அந்த இருவரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள்.
அனைத்து தொகுதிகளிலும் மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அணி வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணிதான். இதனால் அந்த அணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு இருக்கிறது.
வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் போட்டியிட்ட மசெக அணி 51.7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட சிமுக அணி 48.31 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
எதிர்தரப்பு அணிக்கு டாக்டர் டான் செங் போக் தலைமை தாங்கினார். திருவாட்டி ஹாசல் போ, திரு லியோங் முன் வாய், திரு ஜாஃப்ரி கூ, திரு நடராஜா லோகநாதன் ஆகியோர் அந்த அணியில் இடம்பெற்று இருந்தார்கள்.
பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும் புதிய நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 12 எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு இடம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்து இருந்தது.
எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து எஞ்சிய இரண்டு இடங்கள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த வாய்ப்பு வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சிமுக அணிக்கு வழங்கப்படும்.
என்றாலும் தனக்கு இத்தகைய வாய்ப்பு வழங்கப்பட்டால் அதை தான் ஏற்கப்போவதில்லை என்று தேர்தல் பிரசாரத்தின் போது டாக்டர் டான் குறிப்பிட்டு இருந்தார்.
இருந்தாலும் தன் கட்சியின் மற்ற உறுப்பினர்கள் விரும்பினால் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்து இருந்தார்.
தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு பேசிய டாக்டர் டான், தன் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை என்றாலும் தேர்தலில் தன் கட்சிக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“எங்களுக்கு ஓர் இடம் கூட கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி வேட்பாளர்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவை கவனித்தால் அது உண்மையிலேயே எனக்கு பெருமையாக இருக்கிறது,” என்று டாக்டர் டான், 80, தெரிவித்தார்.
சிமுக ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தம் 24 வேட்பாளர்களைக் களமிறக்கியது. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் ஏறக்குறைய 40 விழுக்காட்டு மொத்த வாக்குகளைக் கட்சி பெற்றது.
பிரதமரின் சகோதரரான திரு லீ சியன் யாங் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் தொடர்ந்து எத்தகைய பணி ஆற்றுவார் என்று கேட்டபோது, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியில் திரு லீ சியன் யாங் வலுவான நம்பிக்கைக் கொண்டிருக்கிறார் என்றும் தேர்தல்களில் அவர் பங்கெடுப்பாரா என்பதை அவரைக் கேட்டுதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த செயல்பாடு பற்றி கருத்துரைத்த டாக்டர் டான், தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் ஆளும் கட்சிக்கு வலுவான ஆதரவு மறுக்கப்பட்டு இருக்கிறது என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.