செம்பவாங் குழுத்தொகுதியை 67.29% வாக்குகளுடன் மசெக தக்கவைத்துக்கொண்டுள்ளது. எதிர்த்துக் களமிறங்கிய தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சிக்கு 32.71% வாக்குகள் கிடைத்தன.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இந்தக் குழுத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் இல்லாமல் இம்முறை களமிறங்கியது மசெக அணி. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக திரு கோ அறிவித்ததால் அவரது இடத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக ஓங் யி காங், 50, மசெக அணிக்குத் தலைமை தாங்கினார்.
விக்ரம் நாயர், 41, லிம் வீ கியாக், 51, ஆகியவர்களோடு புதுமுகங்கள் போ லி சான், 44, மரியம் ஜாஃபர், 43 ஆகியோர் இந்த ஐந்து உறுப்பினர் தொகுதியில் திரு ஓங்குடன் இணைந்தனர்.
ஐவன் இயோ, 72, செபாஸ்டியன் டியோ, 73, யாட்ஸெட் ஹைரிஸ், 57, புதுமுகம் சதின் ரவிந்திரன், 27, ஆகியோர் இடம்பெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி அணியை அதன் தலைவர் ஸ்பென்சர் இங், 40, வழிநடத்தினார். இக்கட்சிக்கு அத்தொகுதியில் கடந்த தேர்தலைக் காட்டிலும் கிட்டத்தட்ட 5% வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.
2015 தேர்தலில் மசெக அணி 72.28% வாக்குகளையும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி அணி 27.72% வாக்குகளையும் பெற்று இருந்தன.
நாடாளுமன்றத்தில் மசெகவுக்கு மிதமிஞ்சிய பெரும்பான்மை கிடைப்பதற்கு எதிராக தமது பிரசாரக் குரலை இம்முறை எழுப்பிய அக்கட்சி, பொருள் சேவை வரி உயர்வைக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறு துணிச்சலாகவும் தெளிவாகவும் அந்தக் கட்சி பிரசாரம் செய்ததாகக் குறிப்பிட்ட திரு ஓங் யி காங், அனைவரும் ஒன்றிணைந்து சிங்கப்பூருக்காகப் பாடுபட வேண்டிய நேரமிது என்று தெரிவித்தார்.
இதனிடையே, வாக்காளர்களிடம் கூடுதல் ஆதரவைப் பெறும் விதமாக அடித்தள அளவில் இன்னும் கடுமையாக உழைப்போம் என்று திரு ஸ்பென்சர் இங் கூறி இருக்கிறார்.