எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் செங்காங் குழுத் தொகுதியையும் கைப்பற்றி சாதனை படைத்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் 52.13 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அந்தக் கட்சி பெற்ற வெற்றி மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
செங்காங் குழுத் தொகுதி வெற்றியை அடுத்து நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 10 ஆகக் கூடி உள்ளது.
இந்தத் தொகுதியில் களமிறங்கிய பாட்டாளிக் கட்சி அணி 60,136 வாக்குகளைப் பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணி 47.87 விழுக்காடு அதாவது 55,214 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது.
செங்காங் குழுத் தொகுதியில் தொடக்கம் முதலே போட்டி கடுமையாக இருந்தது. முதலில் 100 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலேயே பாட்டாளிக் கட்சி முன்னணியில் இருந்தது. இது செங்காங் பகுதியைச் சேர்ந்த கட்சித் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
இந்தத் தொகுதியில் களமிறங்கிய பாட்டாளிக் கட்சி அணிக்கு வழக்கறிஞர் ஹி டிங் ரூ, 37, தலைமை தாங்கினார். பொருளியல் துறைப் பேராசிரியர் ஜேமஸ் லிம், 44, சமூக நிறுவனம் ஒன்றை நிறுவிய ரயீசா கான், 26, பங்குச் சந்தை பகுப்பாய்வாளர் லூயிஸ் சுவா கெங் வீ, 33, ஆகியோர் அணியில் இடம்பெற்று இருந்தார்கள்.
இந்த அணியை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் செயல் கட்சி அணிக்கு தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங், 51, தலைமை வகித்தார். செங்காங் குழுத் தொகுதியில் கடும்போட்டி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.
செங்காங் குழுத் தொகுதி இந்தத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது. அதில் பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதியும் செங்காங் வெஸ்ட் தனித் தொகுதியின் ஒரு பகுதியும் சேர்க்கப்பட்டன.
இந்தத் தொகுதிகள் பாட்டாளிக் கட்சிக்குச் செல்வாக்குமிக்க வட்டாரங்களாக இருந்து வந்துள்ளன.
இவற்றோடு பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியின் செங்காங் சென்ட்ரல் பகுதியும் இந்தப் புதிய குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டது.
இதையடுத்து, வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்கும் தன்மை ஆகியவற்றை பாட்டாளிக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும் என்று திருவாட்டி ரயீசா கான் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
“அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மை கொண்ட சிங்கப்பூரை உருவாக்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். நியாயமான, சரிசமமான நாடாளுமன்றத்திற்குப் பாடுபடுவோம். உங்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக நாங்கள் இருப்போம்,” என்று நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தார் திருவாட்டி கான்.