சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், மக்கள் செயல் கட்சி வேட்பாளர் திரு முரளி பிள்ளைக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்து 45.20 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றார்.
தேர்தலில் தோற்றபோதிலும் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் அவர் முன்பைவிட கூடுதல் வாக்குகள் பெற்றிருப்பது குறிப்
பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது அவர் திரு முரளி பிள்ளைக்கு எதிராக 38.79 விழுக்காடு வாக்குகளை மட்டும் பெற்றிருந்தார்.
போட்டியிடும் ஒரு தொகுதியில்கூட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வெற்றி பெறவில்லை என்று முன்னோடி வாக்கு எண்ணிக்கை காட்டியதை அடுத்து, தேர்தல் முடிவுகள் உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே டாக்டர் சீ தோல்வியை ஒப்புக்கொண்டு நேற்று முன்தினம் பின்னிரவு 1.40 மணி அளவில் அங் மோ கியோவில் உள்ள சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மிகச் சிறந்த முறையில் பிரசாரம் செய்ததாக டாக்டர் சீ கூறினார். வாக்காளர்கள் அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட டாக்டர் சீ, தொடர்ந்து போராடப்போவதாகக் கூறினார்.
“தற்போதைய நிலையிலிருந்து இன்னும் எப்படி மேம்படலாம் என்பது குறித்து நாங்கள் ஆராயப்
போகிறோம். கூடுதல் வலிமையுடன் நாங்கள் மீண்டும் போட்டியிடுவோம்,” என்று டாக்டர் சீ தெரிவித்தார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், புக்கிட் பாஞ்சோங் தனித்தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் பால் தம்பையா, கொரோனா கிருமித்தொற்று ஆபத்து இருக்கும் நிலையில் பொதுத் தேர்தலை நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
மக்கள் செயல் கட்சி
பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் நெருக்கடிநிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்
படுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அக்கட்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றும் அவர் சாடினார்.
“தேர்தல் நாளில் பல குளறு
படிகள் நிகழ்ந்ததை நாம் பார்த்தோம். வாக்காளர்கள் கையுறை அணிய வேண்டும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதும் கையுறை அணிய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
“அதன் பிறகு வீட்டில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்தபோது தேர்தல் துறையினர் முழு பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டனர். கட்சிகளின் வாக்களிப்பு முகவர்கள் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
“ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட சவால்களை நாங்கள் சிறப்பான முறையில் எதிர்கொண்டோம். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று டாக்டர் தம்பையா தெரிவித்தார்.
டாக்டர் தம்பையா 46.26 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மக்கள் செயல் கட்சியின் திரு லியாங் எங் ஹுவாவிடம் தோற்றார்.