இவ்வாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இளையர்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக மக்கள் குரல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் தியென் ஃபேஸ்புக்கில் நேற்று தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தின் கடைசி சில நாட்களில் இளையர்கள் சிலர் தமது கட்சி வேட்பாளர்களை அணுகி தங்கள் இலட்சியங்கள் பற்றி தெரிவித்ததாக திரு லிம் கூறினார்.
எதிர்காலம் குறித்து தங்கள் கவலையை அவர்கள் வெளிப்
படுத்தியதாக திரு லிம் தெரிவித்தார். சமத்துவமின்மை, குறைவான வேலை வாய்ப்புகள் ஆகியவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
மேலும் அதிக இளையர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் என்று திரு லிம் எதிர்பார்க்கிறார். அவ்வாறு நடந்தால் சிங்கப்பூருக்கும் நாட்டின் ஜனநாயகத்துக்கும் அது நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் குரல் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
திரு லிம் ஜாலான் புசார் குழுத் தொகுதியில் போட்டியிட்டு 34.63 விழுக்காடு வாக்குகள் பெற்று தோற்றார்.
ஆனால் மக்கள் குரல் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை என்றும் புதிய கட்சி என்கிற முறையில் தேர்தல் முடிவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருப்பதாக திரு லிம் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் குரல் கட்சி கூடுதல் வலிமையுடன் போட்டியிடும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடெங்கும் உள்ள அனைத்து சிங்கப்பூரர்களுடனும் தமது கட்சி தொடர்புகொண்டு கட்சியின் கொள்கைகள், நிலைப்பாடு, திட்டங்கள் ஆகியவற்றை முன்வைக்கப்போவதாக திரு லிம் உறுதி அளித்தார்.