வெற்றி பெறாதபோதிலும் சிங்கப்பூரெங்கும் உள்ள குடியிருப்பாளர்களுக்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தொடர்ந்து சேவையாற்றும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் உறுதி அளித்துள்ளார். அத்துடன், தனது கட்சியிலிருந்து தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கப்போகிறவர்கள் யார் என்பது தம் கட்சியினருக்கிடையே நாளை ( ஜலை 13ஆம் தேதி) நடைபெறும் கூட்டத்தின்போது முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
“மக்களுக்கு சேவையாற்றுவதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் மருத்துவராக பணியாற்றியபோது என்னிடம் வந்த நோயாளிகள் அனைவருக்கும் சேவையாற்றினேன்.
“உயர் கல்வி பெற்றவர்கள் சமுதாயத்திற்குத் தங்களால் இயன்ற வழிகளில் உதவ வேண்டும். இது அவர்களது சமூகப் பொறுப்பு என்பது எனது கருத்து நாங்கள் தொடர்ந்து சேவையாற்றுவோம். சேவையாற்றும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என எனது கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளேன் ,” என்று டாக்டர் டான் தெரிவித்தார் .
நடந்து முடிந்த தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் நூலிழையில் தோற்றபோதிலும் அத்தொகுதியில் டாக்டர் டான் தலைமையில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணி அங்குள்ள குடியிருப்பாளர்களைச் சந் –தித்து நன்றி தெரிவித்தனர்.