சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் உதவி தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய், கட்சியின் துணைத் தலைவர் ஹேசல் புவா ஆகியோர் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பை சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (ஜூலை 14) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் அறிவித்தார்.
தாம் ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததையும், தமது குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினரானால், அவை நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் குறிப்பிட்டு, தாம் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று டாக்டர் டான் முன்பே தெரிவித்திருந்தார்.
திரு லியோங், திருவாட்டி புவா ஆகியோர் வெஸ்ட்கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டிருந்தனர். அந்தத் தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 48.31% வாக்குகள் பெற்றிருந்தது.
தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தலைமையிலான மக்கள் செயல் கட்சி அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது.
தேர்தல் பிரசாரத்தின்போது தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பற்றி இந்தக் கட்சி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமது கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையில் பாட்டாளிக் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் டாக்டர் டான் குறிப்பிட்டார்.