புதிய செங்காங் நகர மன்றம், வேறு தொகுதியுடன் சேராமல் தனி நகர மன்றமாக நிர்வகித்து நடத்தப்படும்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அந்தக் குழுத்தொகுதியைக் கைப்பற்றிய பாட்டாளிக் கட்சி உறுப்பினர்கள் தேசிய வளர்ச்சி அமைச்சிடம் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்கள்.
அந்தத் தொகுதியில் களம் இறங்கி வெற்றி பெற்ற பாட்டாளிக் கட்சி அணிக்குத் தலைமை தாங்கிய வழக்கறிஞர் ஹி டிங் ரூ, 37, புதிய நகர மன்றத்துக்குத் தானே தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவதாக இன்று தெரிவித்தார்.
அரசியல் நிலவரங்கள் பற்றிய புதிய தகவல்களை அவர் ஃபேஸ்புக்கில் குடியிருப்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
செங்காங் குழுத்தொகுதிக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ளும் நடைமுறை தொடர்பில் இப்போதைய இரண்டு நகர மன்றங்களுடன் செயல்பட்டு தேவையானவற்றைத் தன் குழுவினர் செய்ய வேண்டி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
எங்கர்வேல் வட்டாரம், அங் மோ கியோ நகர மன்றத்துடனும் பொங்கோல் ஈஸ்ட் மற்றும் செங்காங் சென்ட்ரல் ஆகியவை பாசிர் ரிஸ்- பொங்கோல் நகர மன்றத்துடனும் செயல்பட வேண்டும் என்பதால் இதன் தொடர்பில் பலவற்றையும் விவாதிக்க பூர்வாங்க கூட்டத்தை நடத்த கோரிக்கை விடுத்து ஜூலை 11ஆம் தேதி கடிதம் எழுதி இருப்பதாகவும் திருவாட்டி ஹி தெரிவித்துள்ளார்.
அண்மைய தேர்தலில் செங்காங்கில் எதிர்த்தரப்பு வென்றது. அதை அடுத்து பேசிய பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், செங்காங்கை தனி நகர மன்றத்துடன் நிர்வகித்து நடத்தவே கட்சி விரும்புவதாகத் தெரிவித்து இருந்தார். அந்த அளவுக்கு அத்தொகுதி பொருளியல் வளத்துடன் இருப்பதாக அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பாட்டாளிக் கட்சி வெற்றியாளர்கள் தங்கள் முடிவை அமைச்சிடம் தெரிவித்துள்ளனர்.