
சிங்கப்பூரின் நிர்மாணத்தில் கடந்த காலத்திலும் இப்போதும் பெண்கள் ஆற்றிவரும் தொண்டை அங்கீகரித்து கொண்டாடுவதோடு சமூகத்தில் பெண்கள் வகிக்கும் மிக முக்கிய பங்கையும் சிங்கை மகளிரைக் கொண்டாடும் இயக்கம் அங்கீகரிக்கிறது. பல முகங்களைக் கொண்ட நமது சமூகத்தில் சிங்கப்பூரின் கதைக்குப் பெண்கள் முக்கியப் பங்கு ஆற்றி உள்ளனர். நமது இல்லங்கள், பள்ளிகள், வேலையிடங்கள், சமூகங்கள் போன்றவற்றை பெண்கள் செதுக்கியுள்ளனர்.
இந்த ஆண்டு முழுவதும் சிங்கை மகளிரைக் கொண்டாடுவோம் இயக்கத்தில் பல கொண்டாட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
ரேவதி தங்கவேல்,32, சமூக ஊழியர்

சமூக ஊழிய மேற்பார்வையாளரான ரேவதி தங்கவேல், 32, ‘பாய்ஸ் டவுன்’ எனப்படும் சிறுவர் இல்லத்தில் பணியாற்றுகிறார். சிறுவர் இல்லத்தில் சமூக ஊழிய கட்டமைப்பை சீர்ப்படுத்தி அதில் பணியாற்றும் சமூக ஊழியர்களுக்கு இவர் வாழ்க்கைத் தொழிலில் முன்னேற்ற பாதைகளை வகுத்து வருகிறார்.
வீட்டில் கவனிப்பின்மை, துன்புறுத்தல் போன்றவற்றால் அவதிப்படும் சிறார்களுடன் பிறருக்கு ஆபத்தை விளைவித்த சிறார்களையும் சிறுவர் இல்லம் கவனித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான வளங்களையும் மனோரீதியான ஆதரவையும் அளிப்பது இவரைப்போன்ற சமூக ஊழியர்களின் தலையாப்ய பணிகளில் ஒன்று. “தங்களது உணர்ச்சிகளைப் பற்றிய சுய விழிப்புணர்வை தேவைப்படும் சிறார்களுக்கு வளர்க்க எங்கள் குழு முற்படுகிறது. அத்துடன் பெற்றோரின் வதைச் செயல்களால் மனநிலை பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு முறையான ஆதரவை வழங்கும் திட்டங்களையும் செயல்படுத்துகிறது,” என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகச் சிறார் இல்லத்தில் பணியாற்றிவரும் திருமதி ரேவதி தெரிவித்தார்.
ஒரு சாதாரணப் பெண் எப்பொழுது அசாதாரணமாக சிறப்படைகிறார்?
‘‘ஒரு பெண்ணாக இருப்பதே அசாதாரணமான ஒன்றுதான். சமூதாயக் கட்டமைப்பின் அடித்தளமே பெண்கள்தான். மக்களை ஒருங்கிணைத்தல், குடும்பங்களின் ஆணிவேராக அமைதல், வேலையுடன் குடும்ப விவகாரங்களையும் குழந்தைகளையும் சமாளித்தல் என பலதரப்பட்ட கடமைகளை அவர்கள் ஆற்றுகின்றனர். ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் போல இதனை ஒப்பிடலாம். தற்கால நிகழ்வுகளின் மேல் ஒரு பார்வையை வைத்தபடியே எதிர்காலத்தையும் அவர்கள் எதிர்நோக்கும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. கண்களில் பல வில்லைகளை அணிவதுபோல பல பொறுப்புகளை தங்கள் தலைகளில் சுமப்பதனால்,
பெண்கள் அசாதாரணமான நிலையை அடைந்து சிறப்பு பெறுகின்றனர்.’’
பெண்கள் முன்னேற்றம் அடைந்திட முக்கியமான மூன்று செயல்கள் அல்லது வழிமுறைகள் யாவை?
‘‘அவளுக்காகவும் அவளது உரிமைக்காகவும் போராடுதல், சுயமாக பராமரித்துக்கொள்
ளுதல், பல அமைப்புகளிலும் செயல் முறைகளிலும் அவளது மதிப்பை அறிந்து செயலாற்றுதல் ஆகிய மூன்றை
குறிப்பிடலாம்.’’
உங்கள் மகளுக்கு ஏதேனும் அறிவுரை சொல்ல விரும்பினால் அது எதுவாக இருக்கும்?
‘‘உன்னை நேசி. மற்றவருக்கு கடமையாற்றுவதிலேயே கவனத்தை செலுத்தும் பெண்கள், தங்களை அடிக்கடி மறந்துவிடுகின்றனர்.
ஆகவேதான், தன்னை நேசிக்க வேண்டும் என்ற அறிவுரை.’’
வருங்கால தலைமுறைகளின் பெண்களுக்கான உங்களின் எதிர்பார்ப்புகள் யாவை?
‘‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளிலும், பெண்கள் என்று வகைப்படுத்தும் ஒருவித தாழ்வுமனப்பான்மையை உடைப்பதிலும், பெண்கள் நிச்சயமாக ஒரு நெடும் பாதையை கடந்துவந்துள்ளனர். பெண்கள் அவர்களது உள் எண்ணங்களின்மீது கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக, தங்களது உள்ளுணர்வுகளை ஆராய்ந்து நிர்பந்தங்களை எதிர்கொண்டு, அவர்களது வெளிப்பாடுகளும், நடத்தையும் மற்றவரை எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். கருணை நிறைந்த, மென்மையான ஒரு சமுதாயத்தை உருமாற்ற உள்ளுணர்வுடன் செயல்படும் தன்மையை பெண்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும்.’’
கந்தசாமி ஜெயமணி,66. முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நெடுந்தொலைவு ஓட்டத்தில் தங்கம் வென்ற ஒரே சிங்கப்பூர் வீராங்கனை என்ற சாதனையை திருவாட்டி கே.ஜெயமணிதான் இன்றுவரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 1,500 மீட்டர் ஓட்டத்திற்கும் (4:31.2) 3,000 மீட்டர் ஓட்டத்திற்கும் (9:56.6) அவர் செய்துள்ள சாதனைகள் இதுவரை முறியடிக்கப்படவில்லை.
சிங்கப்பூரிலும் ஆசிய அளவிலும் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்த பிறகு இவர் 1983ஆம் ஆண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டார். 1,500 மீட்டர் மற்றும் 3,000 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்ற திருவாட்டி ஜெயமணி, 3,000 மீட்டர் போட்டியில் வெண்கலம் வென்றார்.
அதே போட்டியில் திருவாட்டி ஜெயமணி நெடுந்தொலைவு((மாரத்தான்) ஓட்டத்தை 3 மணி நேரம் 2 நிமிடங்களுக்குள் முடித்துக்கொண்டு தங்கம் வென்றார். இவர் சிங்கப்பூரின் அப்போதைய அதிபர் சி.வி. தேவன் நாயரால் இஸ்தானாவில் சிறப்பிக்கப்பட்டார்.
தற்போது இவர் தமது நண்பரின் பாலர் பள்ளி மற்றும் தொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சித் திட்டங்களை வகுக்கவும் நடத்தவும் உதவுகிறார்.
உங்களது வெற்றிப்பாதையில் ஆகப் பெரிய தடையாக அமைந்தது எது?
‘‘ஓட்டத்தின் மேல் இருந்த எனது பற்றுதலுடனும் எனது வாழ்க்கைத்தொழிலுடனும் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதே ஒரு சவாலாக இருந்தது. ஏனெனில் வாழ்க்கைத்தொழிலை விட எனக்கு ஓட்டத்தின் மீதுதான் அதிக விருப்பம்.’’
ஒரு கடினமற்ற பாதையை நோக்கிச் செல்ல ஒரு சமுதாயமாக நாம் என்ன செய்யலாம்?
‘‘ஒரு தனிப்பட்டவர் நேர்மறையான சிந்தையுடன் இருந்து செயலாற்றும்போதுதான் இறுதியில் வெற்றிகள் அமைகின்றன. அதேசமயம் ஒரு சமுதாயமாக நாம் அரசாங்கமும், அற நிறுவனங்களும் உதவி தேவைப்படுவோருக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் ஊக்கம் வழங்குகின்றனர் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அவற்றை உதவி தேவைப்படுவோருக்கு தெரியப்படுத்தி உதவ வேண்டும்.’’
பெண்கள் முன்னேற்றம் அடைந்திட முக்கியமான மூன்று செயல்கள் அல்லது வழிமுறைகள் யாவை?
‘‘பெண்களின் வாழ்க்கைமுறை பல பரிமாணங்களுக்கு உட்பட்டு பரந்த வகையானது. வாழ்க்கை அவர்களுக்கு வழங்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் அவற்றை சமாளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் அவர்களையே மதித்துக்கொள்ளுதல் முக்கியம். எதிர்பாராத
அவசர மாற்றங்களை ஏற்றுக்கொண்டு செயல்படும் திறன்களை வளர்த்துக்கொள்ளுதல் ஒரு வகையாகும். மற்றொன்று, வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருந்துகொண்டு செயலாற்றும் மனத்திடமும் முக்கியமாகும்.’’
வருங்கால தலைமுறைகளின் பெண்களுக்கான உங்களின் எதிர்பார்ப்புகள் யாவை?
‘‘கொவிட்-19 தொற்று தற்கால தலைமுறையினருக்கு மிகவும் கடுமையான சூழலை ஏற்படுத்தியுள்ளது. மேன்மையான சிந்தனையை வளர்த்துக்கொண்டு கடினமான வாழ்க்கைமுறையைக் கடந்து அவர்கள் சாதிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.’’
பெண்கள் மேம்பாடு பற்றிய எங்கள் உரையாடல்களில் இணையுங்கள்: go.gov.sg/SGWomen
சிங்கை மகளிரைக் கொண்டாடுவோம் இயக்கத்துக்கு உங்கள் ஆதரவைக் காட்டுங்கள். go.gov.sg/celebratingSGWomen இணையத்தளத்திற்குச் சென்று எங்கள் பங்காளிகளின் சிறப்புச் சலுகைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
வழங்குபவர்கள்(மேல் வரிசை),
பங்காளிகள் (இரண்டாம், மூன்றாம் வரிசைகள்)
