வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தனியார் குடியிருப்புகளில் கடந்த ஒரு மாத காலமாக வீடுகளிலேயே தங்கியிருந்த சுமார் 85,000 கட்டுமானத்துறை வெளிநாட்டு ஊழியர்களின் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நேற்றிரவு 11.59 மணியுடன் நிறைவு பெற்றது.
அவர்கள் அத்தியவாசியத் தேவைகளுக்காக, கிருமிப் பரவலைத் தடுக்க இங்கு நடப்பில் இருக்கும் அதிரடித் திட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வெளியில் செல்லத் தடையில்லை.
ஆனால், விடுதிகள், விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள், கட்டுமானத் தளங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக தங்குமிடங்கள் ஆகியவற்றில் தங்கியிருப்போருக்கு இது பொருந்தாது. அவர்கள் அடுத்த மாதம் முதல் தேதி வரை அவரவர் தங்குமிடத்திலேயே இருக்க வேண்டியது அவசியமாகிறது.
கட்டுமானத் தளங்களில் கிருமிப் பரவல் அதிகமாக இருப்பதைக் கண்டு கடந்த மாதம் 20ஆம் தேதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுமானத்துறை ஊழியர்கள், அவர்களது குடும்பத்தார் இம்மாதம் 4ஆம் தேதி வரை வீட்டிலேயே இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; பின்னர் அது மேலும் இரு வாரங்களுக்கு, அதாவது நேற்று நடுநிசி வரை நீட்டிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வசிக்கும் மற்றவர்களைப்போல அவர்களும் உணவுப் பொருட்கள் வாங்க, மருத்துவத் தேவைகள் போன்றவற்றுக்கு இனிமேல் வெளியில் செல்லலாம். அதிரடி கட்டுப்பாடுகளை ஊழியர்கள் பின்பற்ற நினைவுறுத்துமாறு கட்டுமான நிறுவனங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கடிதத்தை சுகாதார அமைச்சு மற்றும் கட்டட, கட்டுமான ஆணையம் ஆகியவை அனுப்பின.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோரின் வேலை அனுமதிச் சீட்டுகள், அவர்களைச் சார்ந்திருப்போரின் அனுமதிச்சீட்டுகள் போன்றவை பறிக்கப்படும் என்றது அந்த ஆலோசனைக் குறிப்பு.
ஊழியர்கள், அவர்களைச் சாந்திருப்போர் என சுமார் 180,000 பேர் வீட்டிலேயே தங்கியிருக்கும் உத்தரவால் பாதிக்கப்பட்டனர்.
முக்கியமான கட்டுமானப் பணிகள் ஜூன் 2ஆம் தேதி முதல் படிப்படியாகச் செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு கட்டட, கட்டுமான ஆணையத்தின் அனுமதியைப் பெறுவது அவசியம்.
கடந்த ஒரு மாத காலமாக லிட்டில் இந்தியாவில் இருக்கும் ஓர் அறையிலேயே தொலைக்காட்சி பார்ப்பது, சென்னையில் இருக்கும் குடும்பத்தாருடன் தொலைபேசி வழியாக உரையாடுவது, கூடத்துக்குள்ளேயே நடப்பது என்று பொழுதைப் போக்கிவந்த 44 வயது பாலசுப்பிரமணியம் முத்துராசு, நாளை முதல் வெளியில் மெதுவோட்டம் செல்லவிருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், “காலையில் தோசை, மதியம் இந்தியபாணி சைவ உணவு, இரவு சப்பாத்தி,” என இன்று மூன்று வேளைக்கும் இந்திய உணவு சாப்பிட திட்டமிட்டிருப்பதாக நேற்று தெரிவித்தார் அவர்.