சிறப்பாக தைப்பூசத்திற்கென்று செய்யப்பட்ட தனது சிறப்பு சக்கர நாற்காலியில் 35வது முறையாக சிராங்கூன் சாலையின் ஊர்வல பாதையில் 30 கிலோகிராம் எடையுள்ள அலகு காவடியுடன் ஊர்வலம் சென்றார் திரு திருநாவுக்கரசு சுந்தரம் பிள்ளை.
உடல், முகம் முழுவதும் மொத்தம் 80 இடங்களில் அலகு குத்தியிருந்த 51 வயது திரு பிள்ளை, தனது தம்பி திரு சரவணன் பிள்ளையோடும், அவரின் 13 வயது மகனோடும் காவடி ஏந்தினார். இவ்விருவரும் முதல் முறையாக இவ்வாண்டு காவடி எடுத்தனர்.
$2000 செலவில், அதிக எடை தாங்கக் கூடியதாகவும், முன்னும் பின்னும் விநாயகர் சிற்பங்கள் பொருந்தியதாகவும் தனது சிறப்பு சக்கர நாற்காலியை 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைத்தார் திரு பிள்ளை.
சுயமாக சக்கர நாற்காலியில் தன்னை நகர்த்தி கொண்டு வந்த அவர், குடும்ப நலனுக்காக மூவரும் காவடி எடுத்ததாக தமிழ்முரசிடம் தெரிவித்தார்.
தந்தை திரு சுந்தரம் தன்னுடைய இளம் பருவத்தில் காவடி எடுத்தது இரு பிள்ளைகளுக்கும் ஊக்கமாய் விளங்கியது. 16 வயது முதலே முதுகுதண்டில் மருத்துவ சிக்கல் கொண்டிருக்கும் அவர், சக்கர நாற்காலிக்கு நிரந்தரமாக திரும்பியபோதும் தவறாது காவடி எடுத்து வருகிறார்.