பிடோக் பகுதியில் 2019ஆம் ஆண்டு நடந்த மின்-ஸ்கூட்டர் விபத்தில் 64 வயது திருவாட்டி ஓங் பீ எங் உயிரிழந்தார்.
அவரது இறப்புக்குக் காரணமானது உட்பட மின்-ஸ்கூட்டர் ஓட்டியான மலேசியர் ஹங் கீ பூன், 22, மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதையடுத்து, சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஹங், நேற்று குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
ஹங் ஓட்டிச் சென்ற மின்-ஸ்கூட்டர், விதிமுறைக்கு உட்படாத ஒரு தனிநபர் நடமாட்டச் சாதனம் என்றும் கூறப்பட்டது.
தளவாடப் பொட்டலமடிப்பு உதவியாளராகப் பணிபுரிந்த திருவாட்டி ஓங், புளோக் 539 பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் அமைந்துள்ள மிதிவண்டிப் பாதையில் தனது மிதிவண்டியை ஓட்டிச்சென்றபோது ஹங் தனது மின்-ஸ்கூட்டரைக் கொண்டு அவர் மீது மோதினார்.
இத்தகைய பாதைகளில் வேகக் கட்டுப்பாடு மணிக்கு 25 கிலோமீட்டர் என்ற நிலையில், ஹங் 27க்கும் 43க்கும் இடைப்பட்ட வேகத்தில் தனது மின்-ஸ்கூட்டரை ஓட்டியதாக நம்பப்படுகிறது.
ஹங் மோதியதை அடுத்து, திருவாட்டி ஓங் தரை மீது தூக்கியெறிப்பட்டார்.
வழிப்போக்கர்கள் உதவச் சென்றபோதே மூதாட்டி சுயநினைவற்ற நிலையில், தலையிலிருந்து ரத்தம் கசிந்தவாறு காணப்பட்டார். ஹங், திருவாட்டி ஓங் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மூளை, முகம் உட்பட பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்ததை அடுத்து திருவாட்டி ஓங் கோமா நிலைக்குப் போய்விட்டார். நான்கு நாட்கள் கழித்து அவர் உயிர் பிரிந்தது. இளையருக்கு இம்மாதம் 20ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.