கொவிட்-19க்கு எதிரான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்போது, அது தேவைப்படும் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் அது கிடைக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (ஜூன் 9) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று கட்டுப்படுத்தப்படும் உத்தி பற்றி தேசிய தொலைக்காட்சியில் பேசிய அவர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிக்கான நீண்டகாலத் தீர்வுக்கு தடுப்பு மருந்து மிக முக்கியம் என்று கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாளும் பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவரான திரு வோங் குறிப்பிட்டார்.
மருந்துகள் தயாரிக்கும் தொழில்துறை, உயிர் மருந்தியல் துறையிலான ஆய்வுத் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர், உலக அளவிலான மாபெரும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பங்கேற்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் உட்பட, உலக அளவில் தற்போது சுமார் 130 தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் Arcturus Therapeutics நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி, மனித உடலில் Sars-CoV-2 (கொவிட்-19க்கு காரணமான கிருமி) கிருமியின் ஒரு பகுதியை உற்பத்தி செய்யக்கூடிய தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதேபோல சிங்கப்பூரின் Esco Aster நிறுவனம், Vivaldi Biosciences எனும் அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சிங்கப்பூரிலேயே தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதன் தொடர்பில் பொருளியல் மேம்பாட்டு வாரியம் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.
மேலும் பல சிங்கப்பூர் நிறுவனங்கள் உலக அளவில் மற்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இருந்தாலும், தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலான செயல் என்று குறிப்பிட்ட அமைச்சர் வோங், தற்போது பரிசோதனைகளில் இருக்கும் தடுப்பு மருந்துகள் நல்ல பலனை அளிக்குமா என்பது தெரியவில்லை என்றார்.
அதனால், கொவிட்-19 பரவாமல் இருப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று வலியுறுத்தினார் அவர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

