மலேசியாவில் கொரோனா கிருமி வீரியமிக்க புதிய வகையாக மாறி இருப்பதை சில பரிசோதனை மாதிரிகள் உணர்த்துவதாக மலேசிய சுகாதாரத்துறை கூறுவதில் அடிப்படை ஆதாரம் எதுவுமில்லை என்று சிங்கப்பூரில் உள்ள சுகாதார நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
D614G என்னும் புது வடிவத்துக்கு கிருமி உருமாற்றம் அடைந்திருப்பதை மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்து இருப்பதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார். உருமாற்றம் கண்டுள்ள இந்தக் கிருமி இப்போது பரவுவதைக் காட்டிலும் பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என்று அவர் கருதுகிறார். மேலும், இந்த வடிவ கிருமிக்கு எதிராக தடுப்பு மருந்துகள் ஆக்கபூர்வமாக வேலை செய்யாமல் போகலாம் என்றும் அவர் சொன்னார்.
மலேசியாவில் சிவகங்கை, உலு திராம் ஆகிய இரு கிருமித்தொற்றுக் குழுமங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்தப் புது வடிவத்துக்கு கிருமி மாற்றம் அடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை டாக்டர் நூர் ஹிஷாம் விவரித்தார்.
D614G வகை கிருமி வேகமாகப் பரவக்கூடியது என்று கூறுவதற்கு உண்மையான அறிவியல் தகவல் எதுவும் இல்லை என்று டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் வாங் லின்ஃபா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.அதே பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் வீ எங் இயோங், “இந்தக் கிருமி வடிவம், நோய்த் தடுப்பு மருந்து செயல்படும் விதத்தை நிச்சயமாக பாதிக்காது. பொதுவாக, கிருமியின் வெவ்வேறு வடிவத்திற்கும் எதிரான நோய் எதிர்ப்பொருட்களை (antibodies) தடுப்பு மருந்து கொண்டிருப்பதே அதற்குக் காரணம்,” என்று விளக்கினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணரான இணைப் பேராசிரியர் சூ லியாங், பிப்ரவரியிலிருந்தே இந்தக் கிருமி வடிவம் பரவி வருவதாகக் கூறினார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று கண்டவர்களிடமிருந்து கிருமி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு பிப்ரவரிக்கும் ஜூலைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மாறும் தன்மை கொண்ட 100க்கும் மேற்பட்ட கிருமி மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் ‘செல்’ எனும் பிரசித்திபெற்ற ஆய்விதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. D614G வகை கிருமி உலகளவில் வீரியம் அடைந்து வருவதை அந்தக் கட்டுரை சுட்டியது.