இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவுகூரும் புனித வெள்ளி நாளில் சிங்கப்பூர் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் ஒன்றுகூடி தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கோரினர்.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்ட சூழலில் இவ்வாண்டின் புனித வெள்ளி வழிபாடுகள் வழக்கநிலைக்குத் திரும்பின.
“காலை 10.30 மணிக்குத் தொடங்கிய தமிழ் ஆராதனையில் ‘முடிந்தது’ எனும் தலைப்பிலான பிரசங்கம் நடைபெற்றது. இவ்வாண்டு மக்களுக்கு ஆழ்ந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வசனங்கள் மிகவும் மெதுவாக வாசிக்கப்பட்டன. ஆண்டவரின் அருளால் நெருக்கடி காலத்திலிருந்து நாம் மீண்டு வந்ததற்கு நன்றி செலுத்தும் வண்ணம் உருக்கமாய் அமைந்தது இவ்வாண்டின் கூட்டம்,” என்றார் ஈசூன் கிறிஸ்துவ தேவாலயத்தின் குருவானவர் அருட்திரு இஸ்ரவேல் செல்வம், 49.
“இயேசு தம் பணிவை வெளிப்படுத்த சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவுகூரும் விதமாக தேவாலயங்களில் குருவானவர்கள் மக்களின் பாதங்களை கழுவும் வழிபாட்டு அங்கம் கொரோனா காலத்திற்குப் பின் இவ்வாண்டு மீண்டும் இடம்பெற்றது. பரிசுத்த வியாழனன்று எங்கள் தேவாலயத்திலும் நடைபெற்ற இவ்வங்கம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது,” என்று ஜலான் காயு வட்டாரத்தில் உள்ள பிரசன்ன தேவாலயத்தின் தலைமை குருவானவர் (பொறுப்பு) அருட்திரு எடிசன் நேசகுமார் வில்சன், 60, சொன்னார்.
“எவ்விதத் தடைகளும் நிபந்தனைகளுமின்றி மக்கள் வழிபாட்டு ஆராதனைகளில் மனநிறைவுடன் பங்குகொண்டனர். காலை 9.30 மணியளவில் தொடங்கி ஏறத்தாழ 1.30 மணி நேரம் நீடித்த தமிழ் ஆராதனையில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்,” என்று ஷார்ட் ஸ்திரீட் தமிழ் மெத்தடிஸ்ட் தேவாலயத்தின் குருவானவர் (Pastor In-Charge) அருட்திரு ஜேம்ஸ் நகுலன் கூறினார்.
சனிக்கிழமையன்று (மார்ச் 8) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பிள்ளைகளுக்கான பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுகளும், பொழுபோக்கு அங்கங்களும் தேவாலயத்தின் சமூக மன்றத்தில் இடம்பெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கொவிட்-19 கட்டுப்பாடுகளின்போதும் கட்டுப்பாடுகள் மெல்ல தளர்த்தப்பட்ட நிலையிலும்கூட ஒருவித அச்ச உணர்வுடனே தேவாலயத்திற்கு வர வேண்டிய சூழல் நிலவியது. குறிப்பாக, மூத்தோரும் பிள்ளைகளும் அதிக கவனமாய் இருக்க வேண்டியிருந்தது. இவ்வாண்டு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒன்றாக கூட்டத்தில் கலந்துகொண்டது நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளித்தது,” என்று சொன்னார் பூன் லே பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசி தேவாலயத்தின் தொண்டூழியரான பென்சி கலா, 47.
“புக்கிட் பாத்தோக்கில் உள்ள புனித சம்மனசுகளின் இராக்கினி ஆலய (St Mary of the Angels) ஏற்பாட்டில் பெரிய வியாழனன்று இரவு திருச்சபையைச் சேர்ந்த 135 உறுப்பினர்கள் மூன்று பேருந்துகளில் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள ஏழு தேவாலயங்களுக்கு யாத்திரையாகச் சென்று பிரார்த்தித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது,” என்று குறிப்பிட்டார் சுகாதாரத் துறையில் மேலாளராக பணிபுரியும் சுந்தர் பிலவேந்தர்ராஜ், 34.
“நம்முடைய பாவங்களை ஆண்டவர் கழுவி அளிக்கும் மன்னிப்பை அனுசரிக்கும் இத்திருநாளன்று தேவாலயத்தில் அனைவருடனும் மனமுருகி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது,” என்று தகவல் தொழில்நுட்பத்துறையில் மேலாளராக பணிபுரியும் சிராஜ் சில்வெஸ்டெர், 36, சொன்னார்.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளிக்குப்பின் மூன்றாம் நாளான ஈஸ்டர் ஞாயிறன்று அவரின் உயிர்த்தெழுதலைக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவர்.
monolisa@sph.com.sg