சிங்கப்பூரிலிருந்து கெந்திங் மலையை நோக்கிச் சென்ற காரை மற்றொரு வாகனம் விடாமல் துரத்திய சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் நெருப்பாக பரவிய நிலையில் அதன் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை ஜோகூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் அரசாங்க ஊழியர். மற்றொருவர் போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என நம்பப்படுகிறது.
இருவரும ஜூன் 6 மாலை 6.00 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்று ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் கமருல் ஸமான் மாமாட் தெரிவித்தார்.
இருவருக்கும் வயது 43 முதல் 48 வரை இருக்கும். பொந்தியானில் உள்ள பெர்மாஸ் குடியிருப்புப் பகுதியில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் 3வது நபர் தேடப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஜோகூரில் கூலாய்க்குச் செல்லும் பாதையில் செடனாக்குக்கு அடுத்துள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை 27 கிலோ மீட்டரில் சிங்கப்பூரிலிருந்து சென்ற காரை காவல்துறை வாகனம் போல தோற்றமளித்த மற்றொரு வாகனம் விரட்டிப் பிடிக்க முயற்சி செய்தது.
இந்தச் சம்பவத்தின் காணொளிக் காட்சியை ‘ஃபிரிமேன் கான் டபிள்யூடி’ என்ற பெயரில் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நண்பருடன் தான் காரில் சென்றபோது மற்றொரு வாகனம் பின்தொடர்ந்து பின்னர் அதிவேகத்தில் தொடர்ந்து விரட்டியதாக கான் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த வாகனத்தின் மேற்புறத்தில் நீல நிற ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததால் காவல்துறை வாகனம் என்று முதலில் நினைத்ததாகவும் பின்னர் சந்தேகம் எழுந்ததாகவும் அவர் சொன்னார்.
வாகனம் தொடர்ந்து துரத்திக் கொண்டிருந்த சமயத்தில் கான் காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காரை நிறுத்த வேண்டாம், தேவை ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
பின்னர் நெடுஞ்சாலை 71 கிலோ மீட்டரில் போலி காவல்துறை வாகனம் மாயமாகிவிட்டது. காலை 8.10 மணியளவில் மக்கள்
நெரிசல்மிக்க பாது காப்பான இடத்தில் தனது காரை கான் நிறுத்தினார்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து வாகனத்தின் மேற்புறத்தில் பொருத்தக்கூடிய ஒளிரும் விளக்குகள், மேற்சட்டை, டார்ச், கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் இரண்டு நாள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மற்றொரு சந்தேக நபரான அரசாங்க ஊழியருக்கு தடுப்புக் காவல் உத்தரவு நிராகரிக்கப்பட்டது என்று ஜோகூர் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் பற்றி காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள் இரவு 1.52 மணிக்கு புகார் செய்திருந்தாகக் கூறிய கூலாய் தற்காலிக காவல்துறை தலைவர் யூசோஃப் உதுமான், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கவில்லை என்றார்.