- கி.ஜனார்த்தனன்
தமிழ் மற்றும் வங்காள மொழி பேசும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான டிக்டோக் காணொளித் திறன் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களில் பத்துப் பேர் பரிசுகளை வெல்லவிருக்கின்றனர்.
தொடர்பு, தகவல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்தப் போட்டி, கொவிட்-19 கிருமிப் பரவல் காலகட்டத்தில் ஊழியர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.
இதில் ‘சில் பன்னு மாப்பி’ என்ற தமிழ் அங்கத்தில் சிங்கப்பூர், இந்திய கலைஞர்களின் படைப்புகள் மட்டுமின்றி இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்கள் சுயமாக தயாரித்துள்ள காணொளிகளைக் காட்டும் ‘திறமையைக் காட்டு மாப்பி’ அங்கமும் இடம்பெறுகிறது.
சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளில் சிறந்த 20 படைப்புகளை தமிழக திரைக்கலைஞர் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இன்று (ஜூன் 29) முதல் @sg4mw என்ற டிக்டோக் கணக்கில் அந்தக் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த நான்கைந்து நாட்களில் ஆக அதிக ‘லைக்குகள்’ பெறும் காணொளிக்கு முதல் பரிசாக $1,000 கொடுக்கப்படும். அத்துடன், இரண்டாவது பரிசாக $500யும் மூன்றாவது பரிசாக $300யும் மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இப்போட்டியின் முடிவுகள் ஜூலை 5ஆம் தேதி வெளியிடப்படும்.