27 வயது சு. வித்யபாரதி ஹோட்டல் துறை வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன.
ஆனால் அதற்குள் உலகின் ஆகச் சிறந்த வரவேற்பாளர்களில் (Receptionist) தாமும் ஒருவர் என்பதை தம்மால் இன்னும் நம்ப முடியவில்லை என்று அவர் தமிழ் முரசிடம் பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த ‘டேவிட் கேம்பல் கோப்பை’ எனும் அனைத்துலக சிறந்த வரவேற்பாளர் போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்து தாம் பணியாற்றும் மரினா பே சேண்ட்ஸ் நட்சத்திர ஹோட்டலுக்கும் சிங்கப்பூருக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
போட்டியின் வெற்றியாளர் பரிசு சுவிஸ் நாட்டவருக்கும் மூன்றாம் பரிசு ஜெர்மானியருக்கும் சென்றது.
முகப்புப் பகுதி மேலாளர்கள் மற்றும் ஹோட்டல் மேலாளர்களுக்கான அனைத்துலகச் சங்கம் 1995ஆம் ஆண்டிலிருந்து நடத்தும் இப்போட்டி உலக ஹோட்டல்களின் வரவேற்பாளர்கள் தங்களது சேவை திறன்களை வெளிக்காட்டும் தளமாக விளங்கி வருகிறது.
இவ்வாண்டு ஜெனிவாவில் நடந்த இப்போட்டி கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக, இணையம் வழி நடத்தப்பட்டது.
இந்த மூன்று மணி நேர போட்டியின் இறுதிச் சுற்றில் 12 நாடுகளைச் சேர்ந்த வரவேற்பாளர்கள் பங்கேற்றனர்.
தொலைபேசி வழி ஹோட்டல் முன்பதிவுகளை உறுதி செய்வது, மிக முக்கிய விருந்தினர்களிடமிருந்து வரும் புகார்களைச் சமாளிப்பது, புதிய விருந்தினர்கள் கேட்கும் ஹோட்டல் அறையில் ஏற்கெனவே வேறொருவர் தங்கியிருக்கும் பட்சத்தில் அப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படி சமாளிப்பது போன்றவற்றில் போட்டியாளர்கள் தங்களது திறனை வெளிக்காட்டினர்.
அதோடு, ஹோட்டலில் தங்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு அவசரமாக ஹோட்டலிலிருந்து வெளியாகும் விருந்தினர்களிடம் கட்டணங்களைச் செலுத்துமாறு பக்குவமாகக் கேட்கும் முறையும் சோதிக்கப்பட்டது.
போட்டியாளர்கள் அளித்த பதில், வெளிக்காட்டும் திறன்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது மகிழ்ச்சியில் திளைத்தார் திருமதி வித்யபாரதி.
மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலில் நிபுணர்களை நீதிபதிகளாக வரவழைத்து, மாதிரிப் போட்டியில் ஈடுபடுத்தியது தம்மைப்
போட்டிக்கு நன்கு தயார் படுத்தியது என்று வித்யபாரதி கூறினார்.
“இந்த வெற்றிக்குப் பின்னால் குழு முயற்சி அடங்கியுள்ளது. ஏனெனில் மரினா பே சேண்ட்ஸ் ஹோட்டலின் பயிற்சிக் குழுவினர் இரண்டு மாதங்களாக இப்போட்டிக்கு என்னை தயார்
செய்தனர். இத்துறைக்கு நான் புதிது என்பதால் வெற்றியைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை,” என்று தெரிவித்தார் வித்யபாரதி.
போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த வித்யபாரதிக்கு ஆஸ்திரேலியாவின் முன்னணி ஹோட்டல்களில் தங்குவதற்கான பற்றுச்சீட்டுகள் கிடைத்துள்ளன.
கொவிட்-19 சூழல் மேம்பட்டதும், ஜெர்மனியில் நடக்கும் அடுத்தாண்டின் போட்டியில் விருந்தினராகக் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.
‘சிங்கப்பூரின் சிறந்த வரவேற்பாளர்’ விருதைக் கடந்தாண்டு வென்ற இவர், இவ்வாண்டின் போட்டியில் நீதிபதியாக வலம் வரவுள்ளார்.
கடமையே கண்ணாக, முழு ஆர்வத்துடன் தமது வேலையைச் சிறப்பாகச் செய்து, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் இந்த இளம் சாதனையாளர்.