சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் அதனைச் சீர்ப்படுத்த இயலும் என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. எலிகளில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ள புதிய சிகிச்சைமுறை மனிதர்களிடம் நடத்தப்படும் சோதனையிலும் வெற்றியடைந்தால் இது சாத்தியமாகும்.
இதற்கான முன்னோட்டச் சோதனைகள் இவ்வாண்டு தொடங்கப்படும். பின்னர் அடுத்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு நோயாளிகளிடம் அது சோதிக்கப்படும்.
இந்த சிகிச்சைமுறை நாட்பட்ட சிறுநீரக நோய்க்கான சிகிச்சையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கழகத்தின் தலைவரும் ஆய்வுக்குழு உறுப்பினருமான பேராசிரியர் தாமஸ் காஃப்மன் கூறினார்.
சிங்கப்பூரில் சிறுநீரக பாதிப்பு பெரிதும் கவலைக்குரியதாக இருப்பதை அவர் சுட்டினார்.
இம்மருத்துவக் கழகக் குழுவினருடன் சிங்கப்பூர் இதய நிலைய ஆய்வாளர்களும் ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்களும் அண்மைய ஆய்வில் பங்குகொண்டுள்ளனர்.
சேதமான உடலுறுப்புகளைச் சீராக்கும் புரதம் ஒன்றைச் செலுத்துவதன் மூலம் சிறுநீரகங்களில் ஏற்பட்ட பழுதை நீக்கவும் அவற்றை மீண்டும் நல்லமுறையில் செயல்பட வைக்கவும் இயலும் என்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிறுநீரகங்களைச் சீரமைக்க உலகில் முதல்முறையாக இத்தகைய சிகிச்சைமுறை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுக்குழு தெரிவித்தது.
பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த ஆய்வு தொடர்பில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உலகெங்கும் 850 மில்லியன் பேர் சிறுநீரகச் செயலிழப்பால் அவதிப்படுகின்றனர். நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்களாலும் கடுமையான தொற்றுகளாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படக்கூடும். நீரிழிவால் சிறுநீரகச் செயலிழப்புக்கு ஆளானோர் பட்டியலில் உலகளவில் சிங்கப்பூர் நான்காவது இடத்தில் உள்ளது.