இவ்வாண்டு கொவிட்-19 கிருமித்தொற்றினால் பல இளம் ஜோடிகளின் திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
இருப்பினும், இப்பருவத்தில் சில ஜோடிகள் முன்கூட்டியே திட்டமிட்டபடி தங்கள் பதிவு திருமணத்தை குறித்த தேதியிலேயே நடத்த முடிவெடுத்துள்ளனர்.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், ம.சங்கரும் அ.பானுவும் காதல் வலையில் விழுந்தனர். பதிவுத் திருமணத்திற்கு குறித்த நன்னாள் இவ்வாண்டு மே 24ஆம் தேதி.
இதற்கு 200 விருந்தினர்களை அழைத்து சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் தடபுடலாக நடத்தலாம் என்று முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் அதற்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஒரு தடையாக அமைந்துவிட்டது.
கடந்தாண்டு இதற்கான இட வாடகை கட்டணம் செலுத்தி, அழைப்பிதழ்களையும் இவர்கள் அச்சடித்துவிட்டனர்.
“மார்ச் மாதத்தில் 250க்கும் மேற்பட்டோர் இடம்பெறும் சமூக நிகழ்வுகள் தள்ளிவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்ற செய்தி வந்தபோது அதை நாங்கள் பெருதாகக் கருதவில்லை.
ஆனால் நோய் முறியடிப்புக் காலம் நீட்டிக்கப்பட்டு பதிவு திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டதில் சற்று பதற்றமடைந்தோம்,” என்று 29 வயது ‘டிபிஎஸ்’ வங்கி ஊழியர் சங்கர் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பதிவுத் திருமணங்களை மெய்நிகர் வழியாக நடத்தும் சட்டத்தை அறிமுகம் செய்ய அரசாங்கம் பரீசீலித்துக்கொண்டிருந்தது.
பதிவுத் திருமணத்தைத் தள்ளிவைக்க சிலர் ஆலோசிக்க, எந்த தேதிக்கு தள்ளிவைப்பது, மாற்று தேதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா, பதிவுத் திருமணத்திற்கான இதர சேவைகள் கிடைக்குமா போன்ற ஐயங்கள் தம்பதிக்கு இருந்தன.
ஒருவேளை மே மாதம் திருமணபப் பதிவு செய்ய முடியாத பட்சத்தில் மாற்று தேதியைக் கொடுக்குமாறு ஏப்ரல் மாதத்தில் திருமணப் பதிவக அலுவலகம் அவர்களைக் கேட்டது.
புதிய சட்டம் அமலாக்கப்பட்டதில் மெய்நிகர் பதிவுத் திருமணத்தை மே 24ஆம் தேதி நடத்தலாம் என்று அவர்களிடம் மே 18ஆம் தேதியன்றுதான் தெரிவிக்கப்பட்டது.
ஆறே நாட்களில் தம்பதியினர் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு தயாராகினர்.
அந்நாளில் காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டில் பாரம்பரிய உடை அணிந்து தம்பதியினரும் சக குடும்பத்தினரும் துணை திருமணப் பதிவாளர் திரு ராஜமோகனுடன் ‘ஸூம்’ மெய்நிகர் சந்திப்புத் தளத்தில் இணைந்தனர்.
தம்பதி திருமண உறுதிமொழியை எடுத்துக்கொள்ள, சாட்சிகள், தம்பதியினர் மற்றும் திருமணப் பதிவாளர் அவரவர் வீட்டிலிருந்தவாறு திருமணச் சான்றிதழில் கையெழுத்திட்டு அதனை அவரவர் மின்னிலக்கச் சாதன கேமரா வழி காட்டினர்.
மோதிரம் மாற்றிக்கொள்ள அவசியமில்லாமலே 20 நிமிடங்களில் திருமணம் பதிவாகியது.
கையெழுத்திட்ட சான்றிதழ்களை அஞ்சல் வழியாக தம்பதியினர் திருமணப் பதிவகத்துக்கு அனுப்பிவிட்டனர்.
“பதிவுச் சடங்கு முடிந்த கையுடன் விநியோகச் சேவை வழி பூச்செண்டு ஒன்றை கணவர் அனுப்பியிருந்தார். வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை,” என்று பதிவுத் திருமண நாளை நினைவுகூர்ந்தார் கணக்காளரான திருமதி பானு, 28.
“பல இன்னல்களைக் கடந்து ஒரு வழியாக பதிவுத் திருமணம் முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் பரிசத்திற்கும் நவம்பர் மாதம் கோயிலில் பாரம்பரிய திருமணத்திற்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அனைவரின் ஆசியுடன் பாரம்பரிய திருமணம் நடப்பதே எங்களது ஆசை,” என்று சொன்னார் திரு சங்கர்.
மெய்நிகர் பதிவுத் திருமணமாக இது நடந்தாலும் ஓர் உள்ளார்ந்த உணர்வை கலந்துகொள்வோருக்கு இது தருகிறது என்றும் இது பெரிய அளவில் நடத்தப்படும் பதிவுத் திருமணங்களில் கிடைக்காமல் போகலாம் என்றும் கடந்த 15 ஆண்டுகளாக துணை திருமணப் பதிவாளராக சேவையாற்றி வரும் திரு க. ராஜமோகன் குறிப்பிட்டார்.