வர்த்தக ரீதியிலான அழுத்தங்கள் குறைவாக இருப்பதால் தற்காப்புத் துறையில் பல புதிய தொழில்நுட்பங்கள் உருவாவதாக தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார். இளம் தற்காப்பு அறிவியலாளர்கள் திட்டக் கூட்டத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ஓங், இணையம், 'ஜிபிஎஸ்' போன்றவற்றை உதா ரணங்களாகக் குறிப்பிட்டார். மாணவர்கள், பொறியியலாளர்கள், அறிவியலாளர்கள் என சுமார் 450 பேர் முன்னிலையில் உரையாற்றிய அவர், "அறிவியல், தொழில்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள இது ஏற்ற தருணம். இளம் தற்காப்புப் பொறியாளர்களை உருவாக்குவது முக்கியமானது," என்றார்.
'டிஎஸ்டிஏ' எனப்படும் தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப முகவை, 'டிஎஸ்ஓ' தேசிய ஆய்வகங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்தத் திட்டம் சிங்கப்பூரில் உள்ள 19 ஒருங்கிணைந்த பாடத்திட்டப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 400 உள்ளூர் மாணவர்களுக்கு தற்காப்பு அறிவியலை அறிமுகப் படுத்தியது. தற்காப்பு அறிவியலின் தொடர்பில் ஆய்வு முகாம்கள், ஆய்வுக்கூடப் பாடங்கள், வகுப்பறைப் பாடங்கள் ஆகியவற்றில் பங்கேற்றதுடன் கணினி நிரலிடல், எந்திரனியல் போன்ற திட்டப்பணிகளிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். மாணவர்களுக்குத் தற்காப்பு அறிவியல் துறையில் சுமார் 115 விருதுகளும் உபகாரச் சம்பளங்களும் வழங்கப்பட்டன. நீருக்கடியில் செயல்படும் எந்திரன், ஒளியால் வழிநடத்தப்படும் எந்திரன் ஆகியன இவ்வாண்டுக்கான வெற்றி பெற்ற திட்டப் பணிகளாக அறிவிக்கப்பட்டன. இவற்றைத் தற்காப்பில் பயன்படுத்தினால் நேரம், மனிதவளம் சேமிக்கப்படலாம்.
மாணவர்களுடன் சேர்ந்து சைகைகளைக் கொண்டு இயங்கும் எந்திரனை சோதிக்கும் அமைச்சர் ஓங் யி காங் (இடமிருந்து மூன்றாவது). படம்: டிஎஸ்டிஏ