நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளச் சீட்டில் சம்பளத்தின் அனைத்துக் கூறுகளையும் முழுமையாகப் பட்டியிலிட வேண்டும். வேலைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றங்கள் இன்று முதல் நடப்புக்கு வருகிறது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்தச் சம்பளச் சீட்டு அச்சடித்த தாளாகவோ அல்லது மின்னஞ்சல், இணையம் வழியாகவோ இருக்கலாம். ஊழியரின் அடிப்படை சம்பளம், கூடுதல் நேரப் பணிக்கான ஊதியங்கள், பிடித்தங்கள் போன்ற எல்லா விவரங்களும் இதில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அத்துடன் வேலை நடைமுறை, முக்கிய பொறுப்புகள், சம்பளத்தில் இடம்பெறும் பிடித்தங்கள் போன்ற வேலை ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளையும் நிறுவனங்கள் எழுத்து வடிவில் விவரிக்க வேண்டும். முதலாளிகளுக்கும் ஊழியர் களுக்கும் இடையே தவறான புரிந்துணர்வினால் ஏற்படுக்கூடிய சர்ச்சைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த மாற்றங்கள் சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்பில் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.