சிங்கப்பூரின் மூன்று பெரிய வங்கிகளின் கடன் தரவரிசைக் கணிப்பை நிலைத்தன்மையிலிருந்து எதிர்மறையாகக் குறைத்துள்ளது மூடி'ஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம். வங்கிகளின் சொத்துத் தரம் அவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய லாபம் ஆகியவை குறித்த கவலைகளைக் காரணம் காட்டி இந்தக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிபிஎஸ் வங்கி, அதன் மூலமான டிபிஎஸ் குருப் ஹோல்டிங்ஸ், ஓசிபிசி, யுஓபி ஆகிய மூன்று வங்கிகளே மூடி'ஸ் வெளியிட்ட கணிப்பினால் பாதிக்கப் பட்டவை. சிங்கப்பூரில் வங்கிகள் இவ் வாண்டிலும் அதற்குப் பிறகும்கூட சவாலான சூழலில் செயல்பட வேண்டியிருக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டது.
உள்ளூரிலும் இந்த வட்டாரத்திலும் மெதுவடையும் பொருளியல், வர்த்தக வளர்ச்சியால் சிங்கப்பூரில் வங்கிகளின் கடன் நிலைகள் தொடர்ந்து வலுவிழக்கலாம் எனவும் 'மூடிஸ்' தெரிவித்தது. சிங்கப்பூர் வங்கிகள் கூடுதல் கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கலாம் எனவும் கடன் இழப்பைச் சமாளிக்கும் வழிவகைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் அது குறைந்த அளவிலான லாபத்துக்கு இட்டுச்செல்லும் எனவும் மூடி'ஸ் குறிப்பிட்டது.
சிங்கப்பூர் வங்கிகள் வலுவான மூலதனம், கடன் இழப்பு ஏற்பாடுகள், முன்னேற்பாட்டு வருமானம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதையும் 'மூடிஸ்' சுட்டிக்காட்டியது. வங்கிகளின் நிதி, பணப்புழக்கம் ஆகியவை வலுவாக இருப்பதுடன் தேவையேற்பட்டால் அரசாங்கத்தின் ஆதரவும் கிடைக்கும் என்பதையும் அது கோடிட்டுக் காட்டியது. டிபிஎஸ் வங்கி, ஓசிபிசி, யுஓபி வங்கிகள் தர வரிசையில் இரண் டாவது இடத்திலும் டிபிஎஸ் குருப் ஹோல்டிங்க்ஸ் அதற்கு அடுத்த நிலையிலும் மூடி'ஸ் நிறுவனத்தால் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.