சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசியாவின் வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமானும் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு நல்லுறவை மறு உறுதிப்படுத்தினர். சிங்கப்பூரின் அமைச்சர் சாபாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மலேசியாவின் அமைச்சரை சந்தித்தார் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு மலேசிய அமைச்சர் சனிக்கிழமை விருந்து அளித்தார். அப்போது இரண்டு அமைச்சர்களும் வட்டார நிலவரங்கள் பற்றி பயனுள்ள கருத்துகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சாபாவின் முதல்வர் மூசா அமானையும் சாபாவின் இதர அமைச்சர்களையும் சிங்கப்பூர் அமைச்சர் வெள்ளி, சனிக் கிழமைகளில் சந்தித்தார். சிங்கப்பூருக்கும் சாபாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நல்ல உறவை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர். ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை, வழிகளைத் தொடர்ந்து காணவேண்டும் என்றும் இரண்டு தரப்புகளும் இணங்கின என்றும் சிங்கப்பூரின் அமைச்சு குறிப்பிட்டது. சாபாவில் சென்ற ஆண்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிங்கப்பூரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது பலவகைகளிலும் உதவிய மலேசிய அரசுக்கும் சாபா அரசுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சிங்கப்பூர் அரசின் நன்றியையும் பாராட்டையும் புலப்படுத்தும் வகையில் சனிக்கிழமை டாக்டர் பாலகிருஷ்ணன் விருந்து அளித்தார். சிங்கப்பூர் அமைச்சரின் பயணம் நேற்றுடன் முடிந்தது.
கினபாலு மலை நிலநடுக்க விபத்தில் உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் (இடமிருந்து இரண்டாவது) மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான் ஆகியோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்