சுவா சூ காங் பலதுறை மருந்தகத்துக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.50 மணியளவில் 11 வயதுச் சிறுவனை மோதி விபத்துக்குள்ளாக்கிவிட்டு நில்லாமல் சென்றார் டாக்சி ஓட்டுநர் ஒருவர். தமது டாக்சியில் இருந்த பயணி அவசரப்படுத்தியதால் தாம் நில்லாமல் சென்றதாக டாக்சி ஓட்டுநர் குறிப்பிட்டுள்ளார். இதனால் சிறுவனின் குடும்பத்தார் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
தாயாருக்காக டாக்சி ஒன்றைப் பிடிக்க சாலையின் மறுபுறம் சென்ற சிறுவன் மீண்டும் தாயாரிடம் செல்ல சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த டாக்சி சிறுவன் மீது மோதியதாக அவரது உறவினர் பெனிதா 'ஸ்டோம்ப்' இணையத் தளத்திற்குத் தெரிவித்திருந்தார். சிறுவன் கீழே விழுந்ததும் ஒரு வினாடி டாக்சியை ஓட்டுநர் நிறுத்தினார்.
ஆனால் சற்றும் சிந்திக்காமல் உடனடியாக டாக்சியை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டதாகவும் வேறு ஒரு டாக்சி மூலம் சிறுவனை அவனது தாயார் சந்திரலேகா கேகே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்பட்டது. 112 கிலோ எடையுள்ள சிறுவனுக்கு வலது காலில் மயிரிழை முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் தலையிலும் உடலின் இடது பாகத்தில் வலி இருப்பதாகவும் பெனிதா கூறியுள்ளார்.
கேகே மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாகச் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனை டாக்சி ஓட்டுநர் பார்க்கக் கூட வரவில்லை என்று கூறப்படுகிறது. படம்: ஸ்டோம்ப்