சுதாஸகி ராமன்
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் திருக்குறள் விழா நேற்று முன்தினம் 30வது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது. உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் பங்கேற்றார். தமிழ்மொழியை நாம் இளைய சமுதாயத்தினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் மேலும் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு. விக்ரம் நாயர் கூறினார். பள்ளிப் பிள்ளைகளுக்கு அரசாங்கம் அளிக்கும் CDA, KidStart போன்ற உதவித் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் வலி யுறுத்தினார்.
நிகழ்சியில் வரவேற்புரை ஆற்றிய கழகத்தின் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணன், சிங்கையில் அரசாங்க அறிவிப்புகளில் தமிழ்ப் பிழைகள் அடிக்கடி ஏற்படுவதை சுட்டிக் காட்டினார். 'திருவள்ளுவரின் கனவுகள்=கருத்துகள் மனித சமுதாயத் தில் மெய்ப்படுகிறது அல்லது மெய்ப்படவில்லை' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. ஆறு உள்ளூர் பேச்சாளர்கள் நகைச்சுவை கலந்து வாதங்களை முன்வைத்து, வந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். இரத்தின வேங்கடேசன், சுப அருணாசலம், மு சேவுகன் ஆகி யோர் தலைப்பை ஒட்டிப் பேசினர்; முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன், பிச்சினிக்காடு இளங்கோ, முனைவர் க இராஜகோபாலன் ஆகியோர் தலைப்பை வெட்டிப் பேசினர். மலேசியத் தொலைக்காட்சி, வானொலி பிரபலம் திரு சி பாண்டித்துரை பட்டிமன்ற நடுவராகச் செயலாற்றினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயருடன் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன் (இடது). படம்: தியாக ரமேஷ்