இதயத் திறனிழப்பு, வயிற்றுவலி, வீக்கம் கண்ட சுக்கியன் சுரப்பி (புரோஸ்டேட்), பித்தப்பையில் கல் என உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பலவிதமான நோய்களால் அவதியுற்றவர் 97 வயது திரு கோ சொங் ஹுவாட். மாதத்தில் பாதி நாட்களை மருத்துவ மனையிலும் மீதியை வீட்டிலும் கழிப்பது திரு கோவின் அப்போதைய வழக்கமாக இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரளவு நடமாடிக்கொண்டிருந்த அவர் கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட, நடக்க முடியாதபடி சக்கர நாற்காலியே கதி என்றானது.
உணவு ஒவ்வாமை, பசியின்மை என எடை குறைந்து மோசமாக இருந்த திரு கோவின் நிலையைத் தலைகீழாக மாற்றி உள்ளார் திருமதி ஸ்வரூபராணி, 33. இந்தியாவைச் சேர்ந்த இவர் திரு கோவின் வீட்டில் இருந்தவாறு அவரைப் பராமரித்து வரும் கைதேர்ந்த தாதி. தற்போது திரு கோவின் எடை ஆறு கிலோ கூடியுள்ளது. சத்தான உணவு களை உண்பதால் அவரது ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது. நேரத்திற்கு மருந்துகள் உட்கொள்வதால் சிறுநீரகக் கற்களும் குறைந்துள்ளன. அவ்வப்போது எழுந்து நடக்கவும் செய்கிறார். இதற்கு ஆதாரப் புள்ளியாக இருந்து, திரு கோவைச் சொந்த தந்தையைப் போல் பராமரித்து, அவர் தேறி வர முக்கிய காரணமாக விளங்கியவர் திருமதி ஸ்வரூபா.
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 'ஆக்டிவ் குளோபல்' பராமரிப்பாளர்கள் அமைப்பின் மூலம் சிங்கப்பூருக்கு வந்த திருமதி ஸ்வரூபா, காலையில் திரு கோவைக் குளிக்க வைப்பது, அவருக்கு உணவு ஊட்டுவது, அவ்வப்போது வெளியே அழைத்துச் செல்வது, நேரத் திறகு மருந்து மாத்திரைகள் தருவது போன்ற பணிகளைச் செய்து வந்தார். "தொடக்கத்தில் செய்வதறியாது திணறினேன். திரு கோவிற்குத் தேவை யான சிகிச்சைகளை அளிக்க என் முதலாளி முழு ஆதரவு தந்தார்," என்ற திருமதி ஸ்வரூபா, முதலில் திரு கோவின் உணவுப் பழக்கங்களில் மாற் றங்களை அறிமுகப்படுத்தினார். "முதலில் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை. அவர் மலாய் மட்டும் பேசுவார். சைகைதான் எங்கள் மொழி," என்று வேடிக்கையாகச் சொன்ன திருமதி ஸ்வரூபா, சிறிது சிறிதாக அடிப்படை மலாயும் சீனமும் பேசக் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
உணவு ஒவ்வாமை, பசியின்மையால் எடை குறைந்து மோசமாகி சக்கர நாற்காலியே கதியென இருந்த முதியவர் ஒருவரைத் தமது கனிவான, அக்கறையான பராமரிப்பால் எழுந்து நடக்கும் அளவுக்கு அவரது உடல்நலனை மேம்படுத்தியிருக்கும் திருமதி ஸ்வரூபா, 33 (இடது), இந்தியாவில் தாம் பெற்ற கல்வித் தகுதி, பணி அனுபவச் சான்றிதழ்களை 'ஆக்டிவ் குளோபல்' பராமரிப்பு நிலைய இயக்குநர்கள் திருமதி யோரெல் களிக்கா (வலது), திரு ஜோசஃப் ஆகியோரிடம் காட்டி மகிழ்கிறார். படங்கள்: திமத்தி டேவிட்