கவியரசு கண்ணதாசன், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், உவமை கவிஞர் சுரதா எனும் சுப்புரத்தினதாசன். இம்மூவரில் யார் பாவேந்தர் பாரதிதாசனைத் தங்கள் எழுத்துகளின் மூலம் தூக்கிப்பிடித்து உயர்த்தியவர் என்ற விவாத நிகழ்ச்சியை நேற்று ஏற்பாடு செய்தது சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம். பாவேந்தரின் கவிதைகளில் இடம்பெற்றுள்ள திராவிட மொழி, திராவிட இசை, திராவிட நாடு ஆகிய அம்சங்கள் கண்ணதாசனின் வரிகளில் இடம்பிடித்து உள்ளது என்று வாதிட்ட புதுச்சேரி வழக்கறிஞர் தி. கோவிந்தராசு, கண்ணதாசனே அவரை உயர்த்திப்பிடித்துள்ளார் எனக் கூறினார்.
இதை எதிர்த்து பேசிய மூத்த இதழியலாளர் வெ புருஷோத்தமன் 'பாரதிதாசன் துணை' என்ற வரியிலும் ஒவ்வொரு கவிதை களையும் தொடங்கும் பட்டுக் கோட்டையாரின் பாடல்களில்தான் பாரதிதாசனின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றார். இறுதியாக பேசிய மன்னார்குடி முனைவர் க. இராசகோபாலன், மற்ற இரண்டு கவிஞர்களைவிட பாரதிதாசனோடு வாழ்ந்து அவரோடு நெருக்கமாக பழகி உள்ள சுரதாவே பாவேந்தரைத் தூக்கிப் பிடித்து உயர்த்தியுள்ள படைப்பாளர் என மேற்கோளிட்டார். 'பாவேந்தர் 126, சுழலும் சொற் போர்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் நெறியாளராக விளங்கிய தமிழகப் பேச்சாளர் திரு சீனு வேணுகோபால், நடுவராகவும் இருந்து அனைவருக்குமே சமமான வெற்றி எனத் தெரிவித்தார்.