பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து சாப்பிட்டால் அதில் அழுக்குப் படிந்துவிடுமோ என்று அஞ்சி அதற்காக தரையில் குந்தி உட்கார்ந்தபடி உணவு உண்ட ஊழியர்களின் பிரச்சினைகள் பற்றி கூடுதல் விழிப்புணர்வு தேவை என்கிறார் அந்தக் காட்சியைப் படம் பிடித்தவர். தங்களுடைய வசதியைப் பொருட்படுத்தாது வெளிநாட்டு ஊழியர்கள் இவ்வாறு நடந்துகொள்வது அவர்கள் மற்றவர்களைப் பற்றி சிந்தனையில் இருப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்று ஜூரோங்கில் ஜாலான் புரோ பகுதியில் தான் கண்ட அந்தக் காட்சியைப் படம் பிடித்த அண்டிரிக்கோ அலி என்பவர் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறுகிறார்.
அவ்வாறு கீழே குந்திய நிலையில் உட்கார்ந்திருந்த பங்ளாதேஷ் ஊழியரைப் பார்த்து தாம் அவரை ஏன் பேருந்து நிறுத்தத்தில் உள்ள இருக்கையில் உட்காரவில்லை என்று கேட்டதாகவும் அதற்கு அந்த ஊழியர் தான் அந்த இடத்தை அசுத்தப்படுத்த விரும்பவில்லை என்று பதிலளித்ததாகவும் திரு அண்டிரிக்கோ அலி தமது பதிவில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.