திருவாட்டி டிங் லாங் கின், 88, பேருந்தில் இருந்து இறங்குவதற்கு முன்னதாகவே, பின்பக்கக் கதவு திறந்திருந்த நிலையில் ஓட்டுநர் பேருந்தைக் கிளப்பியதால் அந்தப் பயணி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் இடது பக்க பின் சக்கரம் அவரது காலில் ஏறியுள்ளது. அதனால் அவரது காலை வெட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. கவனக்குறைவான செயலினால் காயம் ஏற்படுத்திய குற்றத்தை எஸ்எம்ஆர்டி பேருந்து ஓட்டுநர் 53 வயது லாவ் பிக் சோங் நேற்று ஒப்புக்கொண்டார். அவருக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 3ஆம் தேதி பிற்பகல் 1 மணி அளவில் 913E பேருந்தில் பயணம் செய்த திருவாட்டி டிங், உட்லண்ட்ஸ் சென்டர் ரோட்டில் தாம் இறங்க வேண்டிய இடம் வந்தபோது பேருந்தை நிறுத்தும் மணியை அழுத்தினார். அவர் மெதுவாக நடந்து இறங்கும்வழியை அடைவதற்குள் ஓட்டுநர் இறங்கும் வழியின் கதவை மூடிவிட்டார். அதைக்கவனித்த பயணி ஒருவர் மீண்டும் நிறுத்தும் மணியை அழுத்த, ஓட்டுநர் கதவை மீண்டும் திறந்தார். ஆனால் திருவாட்டி டிங் கடைசி படியில் இறங்கிக் கொண்டிருக்கும்போதே, கதவை மூடாமல் ஓட்டுநர் வண்டியை எடுத்துவிடடார். பயணி இறங்கி விட்டாரா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.
கீழே விழுந்த திருவாட்டி டிங்கின் காலின் மீது பேருந்தின் சக்கரம் ஏறியதும் பயணிகள் சத்தம்போடவே லாவ் உடனடியாகப் பேருந்தை நிறுத்தினார். திருவாட்டி டிங்கின் இடது கால் சக்கரத்துக்கு அடியில் மாட்டிக்கொண்டது. ஓட்டுநர் பேருந்தை பின்னால் செலுத்தி அவரது காலை விடுவித்தார். அவர் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காயம் கடுமையாக இருந்ததால் அன்றே அவரது இடதுகால் அகற்றப்பட்டது. ஏழு வாரங்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். திருவாட்டி டிங்கிற்கு 5 பிள்ளைகள், 2 பேரப்பிள்ளைகள் உள்ளனர்.