உலகப் பொருளியலில் வளர்ச்சி மந்தமாக இருப்பதால் சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டில் மேலும் கவலையளிப்பதாக அமையும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் பொருளியல் ஆய்வுக் கண்ணோட்டத்தை நேற்று வெளியிட்ட ஆணையம், வர்த்தக வளர்ச்சி குறித்த எதிர்மறையான எண்ணம் மேலும் பரவலாகி உள்ளதாகத் தெரிவித்தது. மேலும், ஊதிய வளர்ச்சி அடையும் அதேவேளையில் வேலையின்மையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது கூறியது. என்றாலும், சில துறைகளில் மட்டுமே வர்த்தக வளர்ச்சி மெதுவடையும் என்றும் முன்னைய உலக நிதி நெருக்கடி சமயத்தில் ஏற்பட்டதுபோன்ற வீழ்ச்சி இருக்காது என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டது.
சிங்கப்பூரின் பொருளியல் அண்மைக் காலமாக மெதுவளர்ச்சியே அடைந்து வந்துள்ளது என்றும் அது கூறியது. கடந்த சில ஆண்டுகளாக நவீன சேவைத் துறை மெதுவாக விரிவு கண்டது. எனினும், உள்ளூரைச் சார்ந்த பொருளியல் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது. உலகின் தேவை மந்தமாக இருந்தாலும் சிங்கப்பூரின் சிறிய வெளிப் படையான பொருளியல் கட்டமைப்பு வளர்ச்சி காணாததாலும் வர்த்தகம் சார்ந்த தொழில் கள் வளர்ச்சி அடையவில்லை.