வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், வீட்டு உடைமையை மாற்றுவதன் தொடர்பிலான விதிகளைக் கடுமையாக்குகிறது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு உடைமையைக் குடும்ப உறுப்பினருக்கு மாற்ற விரும்பினால் அவர்கள் இனிமேல் புதிய சட்டதிட்டங் களுக்கு உட்பட்டு நடக்கவேண்டி இருக்கும். அவர்கள் மணவிலக்கு, நிதி நெருக்கடி உள்ளிட்ட ஆறு சிறப்புச் சூழ்நிலைகளில் மட்டுமே வீட்டு உடைமையை மாற்ற அனுமதிக்கப்படுவார்கள். இதுவரையில் அவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
உரிமையாளர்கள், தங்கள் வாழ்க்கைத் துணைக்கு அல்லது அணுக்க குடும்ப உறுப்பினருக்கு உடமையை மாற்றிவிட்டு, கூடுதல் முத்திரை வரி எதுவுமின்றி தனியார் வீட்டை வாங்க அவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கொள்முதலான சொத்து விலையில் 7% ஆக இருக்கும் இந்த வரி, இங்கு இரண்டாவது குடியிருப்புச் சொத்து எதையாவது வாங்கும் சிங்கப்பூரர்களுக்கு உரிய ஒன்று. புதிய கடுமையான விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி நடப்புக்கு வந்துள்ளன. மணவிலக்கு, உரிமையாளர் மரணம், நிதி நெருக்கடி, குடியுரிமைத் துறப்பு, மருத்துவக் காரணங்கள் ஆகியவை அடிப்படையில் மட்டுமே இனிமேல் உடைமை மாற்றம் அனுமதிக்கப்படும் என்று வீவக பேச்சாளர் தெரிவித்தார்.