டெக் வை லேனில் இருக்கும் ஒரு கடையில் கன்னமிட்டு செல்பேசிகள், மின்னேற்றிச் சாதனங்கள் ஆகியவற்றைத் திருடியதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் போலிஸ் 37 வயது ஆடவர் ஒருவரைக் கைதுசெய்துள்ளது. அந்தக் கடைக்காரர் கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை 4.30 மணிக்குத் தன்னுடைய கடையில் கன்னமிடப்பட்டு திருட்டு நடந்து இருப்பதாகவும் செல்பேசிகள், மின்னேற்றிச் சாதனங்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் போலிசிடம் புகார் தெரிவித்தார். ஜூரோங் பிரிவு போலிஸ் புலன்விசாரணை நடத்தியது. சந்தேகப்பேர்வழியை அடையாளம் கண்டு அவரைச் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணிக்கு டெக் வை லேனியில் போலிஸ் கைதுசெய்தது.
கடையில் காணாமற்போன பொருட்கள் அந்தச் சந்தேகப்பேர்வழியின் வீட்டில் கைப்பற்றப்பட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது. சந்தேகப்பேர்வழி மீது இன்று குற்றம் சுமத்தப்படும். குற்றவாளி என்று தீர்ப்பானால் அவருக்கு 14 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.