புகைமூட்டத்தால் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்படக்கூடிய பொருளாதார, சுகாதார, சமூகத் தாக்கங்கள் வட்டார அளவில் ஆராயப்படவுள்ளன. சென்ற ஆண்டு புகைமூட்டத்தால் ஏற்பட்ட பாதிப்பு 1997, 2013 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கத்தைவிட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் தரவு வகைகள் பற்றி ஆராயப்பட்டு வருவதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று தெரிவித் தார். வெவ்வேறு நாடுகள் தங்களது பொருளியல் நிலைக்கேற்ப வெவ்வேறு தகவல்களைத் திரட்டி வைத்துள்ளன. ஆய்வு நிறைவு பெறுவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் ஓராண்டுக்குள் சில தகவல்கள் பெறப்படும் எனவும் அவர் சொன்னார்.
எல்லைகடந்த புகைமூட்ட மாசு குறித்த துணை வட்டார அமைச்சர்கள் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றியபோது திரு மசகோஸ் இந்தத் தகவல்களை வெளியிட்டார். மலேசியா, தாய்லாந்து, புரூணை, இந்தோனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.