சுதாஸகி ராமன்
சிங்கப்பூர் வான்வெளிக்குள் நுழைந்த சந்தேகத்துக்குரிய விமானத்தை இடைமறிக்க வானத்தை நோக்கிக் கிளம்பும் நான்கு 'ஃபைட்டர் ஜெட்' போர் விமானங்கள். ஆகாய, தரை செயல்முறைகளை மேற்கொள்ளும் CH-47 'சின்னூக்', AH-64D ரக ஹெலிகாப்டர்கள். இவ்வாறு நாளையும் ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் பொது வரவேற்பு தினத்தில் ஆகாயப் படையில் இருக்கும் போர் விமானங்களையும் படையின் திறன்களையும் விமான சாகசக் காட்சிகளின் மூலம் பொது மக்கள் கண்டறியலாம். சுமார் 30 நிமிடங்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த விமான சாகசக் காட்சியை சனிக்கிழமை அன்று காலை 10.30க்கும் பிற் பகல் 2.30க்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30க்கும் மாலை 4.30க்கும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
ஆகாய, தரை செயல்முறைகளின் ஓர் அங்கமாக ராணுவ வீரர்கள் சிலரைக் கொண்ட கனரக வாகனத்தை CH-47 'சின்னூக்' ரக ஹெலிகாப்டர்கள் தூக்கிச் செல்லும். இந்தப் பணியைச் சீராகச் செய்யும் பொறுப்பு இரண்டாவது வாரண்ட் அதிகாரி விஜய்குமார் ரெங்கபாஷ்யத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. "காற்றின் வேகம், வாகனத்தின் எடை ஆகியவற்றை அறிந்து வாகனத்தைத் துல்லியமாக எடுத்து சுமந்து செல்வது மிகவும் முக்கியம். இந்தச் சாகச காட்சிக்காக ஒரு மாதமாக கடுமையான பயிற்சிகளை எடுத்து வந்தோம்," என்றார் அவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு நடைபெறும் பொது வரவேற்பு தினத்தில் பார்வையாளர்கள் கேளிக்கையான நடவடிக்கை களை எதிர்பார்க்கலாம் என்று சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை கூறியுள்ளது.
ராணுவ வீரர்கள் சிலரைக் கொண்ட கனரக வாகனத்தை CH-47 'சின்னூக்' ரக ஹெலிகாப்டர்கள் தூக்கிச் செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளார் இரண்டாவது வாரண்ட் அதிகாரி விஜய்குமார் ரெங்கபாஷ்யம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்