இந்தியாவின் ஹைதராபாத் நகரில் இடம்பெறும் தன்னுடைய புதிய தொழில்நுட்ப மையத்துக்கான விரிவாக்கத் திட்டங்கள் பற்றி சமூக ஊடகத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றதாக சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி தெரிவித்திருக்கிறது. அந்தப் புதிய மையம் காரணமாக சிங்கப்பூரிலிருந்து 1,500 வேலைகள் இந்தியாவிற்கு இடம் மாறும் என்று கூறப்படுவதை இந்த வங்கி மறுத்திருக்கிறது. 'தி இண்டிபென்டண்ட்' என்ற சிங்கப்பூரின் உள்ளூர் கணினிச் செய்தி இணையத்தளத்தில் சென்ற வெள்ளிக் கிழமை இடம்பெற்ற ஒரு தகவல் தொடர்பில் வங்கி விளக்கம் அளித்தது. டிபிஎஸ் வங்கி சிங்கப்பூரிலிருந்து 1,500 வேலைகளை இந்தியாவிற்கு இடம் மாற்றுகிறது என்று அந்தக் கணினிச் செய்தி தெரிவித்திருந்தது. அதன் தொடர்பில் டூவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக இணையத்தளங்களில் பல கருத்துகளைப் பலரும் வெளியிட்டனர்.
டிபிஎஸ் வங்கி இப்போதைய தனது தொழில்நுட்ப நடவடிக்கைகள் எதையும் வேறு இடத்திற்கு மாற்றவில்லை என்றும் அத்தகைய திட்டம் எதுவும் வங்கியிடம் இல்லை என்றும் அறிக்கை ஒன்றில் டிபிஎஸ் தெளிவுப்படுத்தியது. இந்தியாவின் ஹைதராபாத் நகரில் தொழில்நுட்ப மையம் ஒன்றைத் தான் அமைப்பதாக டிபிஎஸ் வங்கி அண்மையில் இந்தியாவில் அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது.