தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வு முறையில் இடம்பெற இருக்கும் மாற்றங்கள், மாணவர்கள் கல்வி கற்க இடம் பெறும் தவறு இல்லாத முழுமையான அணுகுமுறைதான் என்றும் எல்லாவற்றுக்கும் அதுவே மந்திரத் தீர்வாகிவிடாது என்றும் தற்காலிகக் கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் கருத்துரைத்தார். ஏட்டுக் கல்விக்கு அளவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அத்தகைய மனஉளைச்சலை தவிர்த்து கொள்ளும் வகையில் புதிய மாற்றங்கள் இடம்பெறுவதாக தெரிவித்த அமைச்சர், இதில் முழுமையான வெற்றி கிடைக்கவேண்டுமானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முதலாளிகள் எல்லாரும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.
'டாக்கிங் பாயிண்ட்' என்ற மீடியாகார்ப் நடப்பு விவகார நிகழ்ச்சியில் பேசிய அவர், "கல்வியில் உன்னதத்தை அடைய எப்பொழுதுமே நாம் முக்கியத்துவம் அளிப்போம்," என்று தெரிவித்தார். அதே வேளையில் ஏட்டுக் கல்விக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பதால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார். "கல்வியைப் பொறுத்தவரை சிறார்கள் உயர்ந்த குறிக் கோள்களைக் கொண்டிருக்கவேண்டியதே என் விருப்பம்.
அதேவேளையில் ஒரு பையன் 99 மதிப்பெண்களை எடுத்தி ருக்கையில் 100 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று அந்தப் பையனை மேலும் மேலும் நெருக்கினால் அதற்கு அதிக விலைகொடுக்கவேண்டி இருக்கும்," என்றார் அமைச்சர். பெற்றோரும் மாணவர்களும் புதிய ஏற்பாட்டை முற்றிலும் புரிந்துகொள்ளவேண்டும் என்ற அமைச்சர், இதன் மூலம் தேவையில்லாத மனஉளைச்சலைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்றார்.