விமான நிலைய ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, மேம்படுத்தப்பட்ட மிகவும் யதார்த்தமாக அவசரகாலச் சூழ்நிலைகளைச் சித்திரிக்கும் கணினித் திட்டம் ஒன்று நேற்று முதல் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 'ஏர்போர்ட் ஃபோம் டெண்டர் டிரைவிங் சிமியுலேட்டர்' எனப்படும் அந்தப் பயிற்சிச் சாதனமானது விமான நிலையங்களில் தீயணைப்பதற்காக நுரை, நீரைப்பயன்படுத்தக் கூடிய 'ஃபோம் டெண்டர்ஸ்' எனப்படும் சிறப்பு வாகனங்களை ஓட்டக்கூடிய ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சாதனமானது விமான விபத்துகள், தீப்பற்றி எரியும் விமானத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்படுதல் போன்ற அவசரகாலச் சூழல்களைச் சித்திரிக்கும். சாங்கி விமான நிலையத்தின் நான் காவது முனைய வரைபடமும் இந்தச் செயலியில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து காரணமாக விமான நிலைய ஊழியர்களைத் தயார்நிலையில் வைப்பது அவசியமாகிறது என சாங்கி விமான நிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ சியோ ஹியாங் கூறினார்.
விமான நிலைய அவசரகாலச் சேவைகள் அதிகாரி முகமது யாஸிட், 46, புதிய 'ஏர்போர்ட் ஃபோம் டெண்டர் டிரைவிங் சிமுலேட்டர்' சாதனத்தைச் செயல்படுத்திக் காட்டினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்