உள்ளூர் கட்டடக்கலை, நில வனப்பு புகைப்படக்காரர் டேரன் சோ, 40, செம்பவாங்கில் எடுத்த மின்னல் புகைப்படம் (இடது படம்) ஆயிரக்கணக்கானோரால் பாராட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அந்தப் புகைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் திரு சோ மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். தாம் எடுத்த மற்ற படங்களைவிட இது சற்று மேம்பட்டிருந்தாலும் அதற்கு இவ்வளவு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சோ நேற்று தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை 'ஃபேஸ்புக்'கில் பதிவேற்றப்பட்ட திலிருந்து இந்தப் புகைப்படம் 43,000க்கும் மேற்பட்ட 'லைக்' களையும் 14,000க்கும் மேற்பட்ட பகிர்வுகளையும் பெற்றுள்ளது. அனைத்துலக செய்தி இணையத்தளங்களிலும் இந்தப் படம் பதிவேற்றப்பட்டிருந்தது.
இந்தப் படத்தை தமது 'ஃபேஸ்புக்' பக்கத்தில் பிரதமர் லீ சியன் லூங் பகிர்ந்ததுடன் "ஒவ்வொரு நாளையும் அசாதாரணமாக்கும் நுட்பமான திறம்," என்று திரு சோவைப் புகழ்ந்திருக்கிறார். செம்பவாங்கில் உள்ள மாண்ட்ரீல் லிங்க் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) குடியிருப்பின் 16வது மாடியிலிருந்து ஜோகூர் நீரிணையை நோக்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திரு சோ எடுத்த சுமார் 100 புகைப்படங்களில் இதுவும் ஒன்று. மின்னல் புகைப்படங்களை எடுக்க கடந்த நான்கு ஆண்டுகளாக முயன்று வந்ததாகவும் தற்போது அந்த வாய்ப்பு நல்ல முறையில் கைகூடி வந்திருப்பதாகவும் திரு சோ சொன்னார்.
புகைப்படக் கலைஞர் டேரன் சோ. படம்: ஜான் ஹெங்