உடல் வளர்ச்சிக்கு ஏற்ற மன வளர்ச்சி இல்லாதது, எழுத, பேச வராதது போன்ற வளர்ச்சிப் பிரச்சினைகளுடன் கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேகே தாய்சேய் மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள சிறார் மேம்பாட்டுச் செயல்திட்டப் பிரிவு சென்ற ஆண்டு இத்தகைய சுமார் 4,000 பிள்ளைகளை அடையாளம் கண்டிருக்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 60% உயர்வு என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய பிள்ளைகள் மதிப்பிடப்பட்டு அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வளர்ச்சிக் குறைபாடுகள் பற்றிய புரிந்துணர்வு அதிகரித்திருப்பதும் பாலர் பள்ளிகளிலும் சமூகத்திலும் மேம்பட்ட பரிசோதனை வசதிகள் இருப்பதும் இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.