டாக்சியிலிருந்து தன்னுடைய பையைக் கீழே இறக்க உதவாத டாக்சி ஓட்டியைத் தலையில் குத்திய ஒரு பயணிக்கு ஒரு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பிடோக் ரிசர்வோர் ரோட்டுக்கு அருகே ஜாலான் தெனா காவில் இருக்கும் ஒரு கார் பேட்டையில் சியா கோக் கியோங், 56, என்ற டாக்சி ஓட்டியைச் சென்ற ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி தாக்கியதாக டான் கோக் சுவான், 29, என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சாங்கி விமான நிலையம் முனையம் 2லிருந்து ஜாலான் தெனாகாவில் இருக்கும் 651வது புளோக்கிற்குப் பக்கத்தில் உள்ள கார் பேட்டைக்குச் செல்வதற்காக திரு சியாவின் டாக்சியில் டான் ஏறிக்கொண்டார். டாக்சியிலிருந்து தனது பையைக் கீழே இறக்கும்படி திரு சியாவை டான் கேட்டுக் கொண்டார். அதற்குத் திரு சியா மறுக்கவே இருவருக்கும் இடையில் பிரச்சினை மூண்டது. அப்போது திரு சியாவின் தலையின் இடது பக்கத்தில் ஒரு சில தடவை டான் குத்தினார். திரு சியா தரையில் விழுந்து விட்டார். போலிஸ் அழைக்கப் பட்டது. திரு சியா சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட் டார். வெளி நோயாளி சிகிச்சைப் பெற்ற திரு சியாவுக்கு மூன்று நாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டது.
சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்ட டான், திரு சியாவுக்கு $700 தர தானே முன்வந்தார். ஆகையால் தன் கட்சிக்காரர் மீது கருணை காட்டும்படி வழக்கு விசாரணையின்போது டான் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் வாதாடினார். டானை மன்னித்துவிடும்படி கேட்டுக்கொண்டு டானுக்கு இரண்டாவது வாய்ப்பு ஒன்றைத் தரும்படி நீதிமன்றத்தைக் கடிதம் மூலம் திரு சியாவே வலியுறுத்தி யிருக்கிறார் என்பதையும் அந்த வழக்கறிஞர் விசாரணையின் போது குறிப்பிட்டார்.