மெக்சிகோவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட சிங்கப் பூரின் அதிபர் டாக்டர் டோனி டான் கெங் யாமிற்கு நேற்று மெக்சிகோ சிட்டியில் தேசிய அரண்மனையில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. மெக்சிகோவின் அதிபர் என்ரிகே பெனா நெய்ட்டோவை சந்தித்து அதிபர் டோனி டான் பேச்சு நடத்தினார். மெக்சிகோ சிட்டியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையத்தில் அமைந்திருக்கும் தேசிய அரண்மனையில் டாக்டர் டான் வரவேற்கப்பட்டபோது இரு நாடுகளின் நாட்டுப் பாடலை ராணுவ இசைக்குழு இசைத்தது. பிறகு டாக்டர் டான் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். மெக்சிகோவிற்கு சிங்கப்பூர் அதிபர் ஒருவர் அரசாங்க வருகை அளித்திருப்பது இதுவே முதல் முறை. மெக்சிகோ பயணத்தின் நான்காவது நாளன்று அதிபருக்கு சடங்குபூர்வ வரவேற்பு அளித்துச் சிறப்பிக்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் மெக்சிகோவுக் கும் இடையில் இருதரப்பு உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. அந்த உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இரு நாடுகளின் நிலவரங்கள் பற்றியும் இரு தலைவர்களும் பலவற்றை விவாதித்தனர். அரசியல், பொருளியல், கல்வி, கலாசாரம் போன்ற துறைகளில் தொடர்புகளை இரு நாடுகளும் விரிவுப்படுத்த பல வாய்ப்புகள் இருப்பதை இரு அதிபர்களும் சுட்டிக்காட்டினர். அதிபர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மூன்று புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.
மெக்சிகோ சிட்டி தேசிய அரண்மனையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட அரசாங்க விருந்தில் அதிபர் டோனி டானும் மெக்சிகோ அதிபர் என்ரிகே பெனா நெய்ட்டோவும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்